Pages

Wednesday 10 October 2012

காத்திரு பெண்ணே!


வெயில் வெறுத்தே உலகைவிட்டு
வீழுதடி மனசுதொட்டு
வயல் கரையில் ஆடிஉலா வந்தவளே - உன்
வடிவெடுத்து வானம் செம்மை கண்டதல்லோ

முயல்பிடித்தேன் மூணுகாலு
நெல்விதைத்தேன் சோழமாச்சு
இவள் மயக்க கதையளந்த மன்னவரே - உள்ளம்
எதைநினைத்து கலங்குகிறாள் இன்றவளே

கண்ணிலிட்ட மைகறுப்பு
காணுங் குரல் தளதளப்பு
என்னவட்டம் போடுகிறாய் சின்னவளே- உன்
இளமை என்னை கொல்லுதடி பொன்னவளே

மண்ணை ஆழஉழுதுவைத்து
மாடுரண்டை விரட்டிகிட்டு
கண்ணை மேல வைக்கிறீரே சின்னவரே - இது
கண்ணியமோ கூறுமய்யா பொன்னவரே?

சலசலத்து ஓடும்நதி
சற்று நடை தவறுமடி
சிலுசிலுத்த புல்வரம்பில் சித்திரமே - நீ
சிரித்து விட்டால் மாமன் கெட்டான் இக்கணமே

கலகலப்பு பேச்சிலிட்டு
கன்னிமனம் கலங்கவிட்டு
நிலவு நேரம் கைபிடிக்கும் நல்லவரே- உங்க
நினைவி லிங்கு காயும் நிலா வெந்ததுள்ளே

கலயமொன்று இடுப்பில் வைத்துக்
கைவடிக்கா சிலைநடந்து
வலை விரித்தே எனைப்பிடித்தாய் வல்லவளே- இந்த
வானத்துக்கும் மழை இருக்கு ஈரமுள்ளே

உலையிலிட்ட சோற்றினிலே
ஒருபருக்கை பதமெடுத்து
நிலையறிந்து வடிச்சிடலாம் மன்னவரே - உங்க
நினைவி லேது படிக்கணும் நான் இன்னுமல்லோ?

சலசலத்துக் காளை பூட்டி
சாலையிலே ஓடும்வண்டி
கலகலக்கும் உன் சலங்கை சத்தமடி - என்
காலமெல்லாம் உன்முகந்தான் மிச்சமடி

நெல்முதிரும் கதிர் வளையும்
நேரம்வரும் அறுவடைக்கும்
நல்லவரே வளைந்து நின்றேன் பாரய்யா - எந்த
நாளில் எனைக் கைபிடிபாய் கூறய்யா

வயல் விதைத்து வளரவிட்டு
வளம் கொழிக்க அறுத்தெடுத்து
வசதியுடன் மாமன் நிற்பான் தையிலே - அப்போ
வாழ்வில் உனைக் கலந்திடுவேன் பொய்யில்லே

புயல் அடிக்கும் மழையும்கொட்டும்
புகுந்த வெள்ளம் குடியழிக்கும்
அயல் முழுக்க கிசுகிசுக்கும் நல்லவரே -- உயிர்
அதுவரைக்கும், துடித்திருக்கும் என்னவரே!

Monday 1 October 2012

என்ன மாயமோ

கண்ணெதிரில் குதித்தோடும் நதியெனக்
  காணும் மகிழ்வு கொண்டாள் - உயர்
வெண்முகிலும் கொண்ட வானநிலவென
  வண்ணம் மறைந்து கொண்டாள் 
திண்ணமிதே அந்த தென்றலென விழி
  தன்னில் குளுமை கொண்டாள் - ஏதும்
பண்ணாமலே உயிர் வேதனை ஆக்கிப்பின்
   பாதியென் றாகிவிட்டாள் 
    
கண்களினைக் கயலென்று சொன்னார் அவை
  காணுமோ என்றிகழ்ந்தேன் - இது
பெண்மயிலோ எனப் பேச்சுரைத்தார் இவள்
  பேதமை யில் நகைத்தேன்
எண்ணமின்றி அயல் சென்றவனை அட
  எப்படி மாற்றினளோ - இரு
கண்ணசைவில் என்னை கொள்ளையிடும் வகை
  கண்டு திகைத்துநின்றேன்

பொன்னெனு மோரெழில் மாலை கண்டேன் சுடர்
  போகமயங்கி நின்றேன் - பசுந்
தென்னோலையில் நடஞ்செய்யுந் தென்றல்தொட
  தேகம்சிலிர்க்க நின்றேன்
என்னானதோ இவள் பார்வைபட இவை
  அத்தனையும் மறந்தேன் - என்ன
சொன்னால் நடந்திடும் மாயமென அவள்
  சுட்டும் வழிநடந்தேன்
 
தண்டாடும் பொய்கையின் தாமரையின் எழில்
  தன்னை இரசித்திருந்தேன் -அதில்
கொண்டாடிக் கும்மாளம் போடும் அலையிடை
  கூடிக் களித்திருந்தேன்
திண்டாடிக் காயம் எடுத்த மனதினில்
  தென்பினை ஊட்டவென - நிற்கக்
கண்டோடி என்னில் கலந்தவளோ இது
  காண்சுகம் அல்லவென்றாள்

சொண்டோடிச் செவ்வண்ண மானகிளி சொல்லும்
  செல்ல மொழியுடையாள் - கடல்
நண்டோடி ஊரும் நடை பயில்வாள் இந்த
  நானிலத்தில் எழிலாள்
தொண்டாகித் தூய மனமெடுத்தாள் எனைத்
  தோழமை கொள்ள வைத்தே - ஒரு
செண்டாகிப் பூவாய் தினம் மலர்வாள் எனைச்
   சித்தம் பிழற வைத்தாள்

Monday 24 September 2012

வா என் செல்லம்!

கண்கள் என்னும் மின்னல்பட்டு காதல்வந்ததோ இல்லை
பெண்கள் கூந்தல் முல்லைமொட்டு வாசம் கொல்லுதோ
உண்ண எங்கும் தேனின் சொட்டு ஊற்று கின்றதோ - மலர்
உன்னத்தொட்டுக் கொள்ளுஎன்று என்னை தூண்டுதோ

சின்னசிட்டு வானம்தொட்டுத் துரப் போகுதே - ஆசை
என்னைத் தட்டி ஏக்கம் கொள்ள இன்ப மாகுதே
உன்னைத் தொட்டுகொள்ள நீயும் ஓடிச்செல்வதேன் -அந்தக்
கன்னம் தொட்டுக் கொள்ள வாழ்வில்காலம் உள்ளதோ

கொட்டுவானம் பூமி வந்து வீழும் வெள்ளமே உனை
கட்டிக் கையுள் காணும்போது இன்பம் கொள்ளுதே
வட்டக் கண்ணில் பார்வையென்ன வெட்டும் மின்னலே -அதில்
தட்டத் தட்டச் சத்தபோடும் எந்தன் நெஞ்சமே

அச்சமின்றி பக்கம்வாடி அன்புதெய்வம்நீ -உந்தன்
மச்சக் கண்ணில் என்னைப் போட்டு வைச்சதென்ன தீ
உச்சிவானின் வெண்ணிலாவின் தங்கையாமோ நீ - மனம்
இச்சைகொண்டு காயும் தாகம், கொல்லுதேமே னி

பச்சைமேனி மஞ்சள் பூசி பார்வை கொள்ளவே - நீயும்
வைச்சகண்ணும் என்னைக் கொல்ல வாழ்வதெப்படி?
கச்சை மார்பில் வெப்பமூச்சு சுட்ட துன்பமே அதை
இச்சை கொண்டு நானணைக்க பக்கம் நில்லடி

கொண்டை மாலை சூட்டிஉன்னைக் கோலமாகவே - நானும்
செண்டுப்பூவை கொள்வதாக செல்லமாகவே
வண்டுபோல வந்துநின்று வாழ்வுகாணலாம் ஊரும்
ரண்டுபேரும் நல்லஜோடி என்றுவாழ்த்தணும்

Thursday 30 August 2012

காதலர் சங்கமம்

கனிமலர் பூத்திடும் இளமலர்ச் சோலையில்
காதலி தேடியே அவன் நடந்தான்
இனிமன தானவள் எழில்பொழில் நீரொடு
இழைந்திட மலராய் நனைந் திருந்தாள்
தனிமையில் வேகிட தலைமுதல் கால்வரை
தகித்திடத் தீய்ந்திடும் மேனியினள்
நனிகுளிர்த் தாமரை நடமிடும் கோலமென்
றலைதனில் ஆடியே குளிரநின்றாள்

இளையவன் பார்த்திரு விழிகளும்கூசிட
எரியழல் பூத்தொரு தாமரையாய்
விளையுறும் மோகமும் விழிகளில் தாகமும்
வினைகொளுந் துயரெழ மனமிழந்தான்
துளையிடு மூங்கிலில் புகுவிரை காற்றினில்
தோன்றிடும் இசையென மீட்டிடவே
வளைபுகு நண்டென விரல்களும் ஓடியே
விந்தைகள் கண்டிட வேண்டிநின்றான்

தணிகனல் பொழிலலை தடவிய தென்றலும்
தரையினில் மலர்களின் மணம் விடுத்து
அணியெழில் குறுநகை எழுமிதழ் உடல்மணம்
இனிதென கண்டதைக் கொண்டதுவே
மணியிடை காணுமோர் நெளிவினை தானலை
மனதினில் கொண்டதைப் போல்நெளிய
அணிகுழல் தானலை விரிந்திட மீன்களும்
அது ஒருவலையென அஞ்சினவே

கரைதனில் காவலன் கனிஉண வினைகொள
காத்திட இவளோ கரைநினைந்து
விரைந்திடநீர்வழிந் தலைதனில் வீழ்ந்திட
வேகுடல் நீர்சுட ஓடினமீன்
நுரையெழுமதுவினை நிறையிதழ் மேற்கினில்
கடல்விழு சுடுபழம்போல்சிவந்தே
நரைகரு முகிலினை நிகரிரு குழல்முடி
நடுநுத லசைவதில் அழகடைந்தாள்

புனையணி உடைதனை மதன்விடுகணைபட
பெருகிடும் தீயதைப் பொசுக்கிடுமே
எனமன மஞ்சிய சிறியவள் நிலைதனில்
அணிவதோ விடுவதோ எனமயங்க
கனமொடு வளர்கனி நிலவெழப் பாலொளி
கவிந்தொரு தோட்டமென் றிருள்மறைய
தினவெடு தோளினன் இரவினில் யாசகன்
தேர்ந்திடு பசியொடு குணமழிந்தான்

பண்ணொடு இசைதரும் பளிங்கெனும் சிலைமகள்
பக்க மணைந்ததும் நுனிவிரலால்
விண்ணிடி மழையுடன் வருமொரு மின்னலை
விரல்தொடும் நினைவுடன் மெலவணைத்தான்
செண்டென பூவனம் செறிமலர் தேனுண்ணும்
வண்டெனநானென விதியமைத்து
தண்டினை காம்பினைத் தளிர்மலர்பூவினைக்
கொண்டவள் நீயென தேன் அளைந்தான்
கனிமலர் பூத்திடும் இளமலர்ச் சோலையில்
காதலி தேடியே அவன் நடந்தான்
இனிமன தானவள் எழில்பொழில் நீரொடு
இழைந்திட மலராய் நனைந் திருந்தாள்
தனிமையில் வேகிட தலைமுதல் கால்வரை
தகித்திடத் தீய்ந்திடும் மேனியினள்
நனிகுளிர்த் தாமரை நடமிடும் கோலமென்
றலைதனில் ஆடியே குளிரநின்றாள்

இளையவன் பார்த்திரு விழிகளும்கூசிட
எரியழல் பூத்தொரு தாமரையாய்
விளையுறும் மோகமும் விழிகளில் தாகமும்
வினைகொளுந் துயரெழ மனமிழந்தான்
துளையிடு மூங்கிலில் புகுவிரை காற்றினில்
தோன்றிடும் இசையென மீட்டிடவே
வளைபுகு நண்டென விரல்களும் ஓடியே
விந்தைகள் கண்டிட வேண்டிநின்றான்

தணிகனல் பொழிலலை தடவிய தென்றலும்
தரையினில் மலர்களின் மணம் விடுத்து
அணியெழில் குறுநகை எழுமிதழ் உடல்மணம்
இனிதென கண்டதைக் கொண்டதுவே
மணியிடை காணுமோர் நெளிவினை தானலை
மனதினில் கொண்டதைப் போல்நெளிய
அணிகுழல் தானலை விரிந்திட மீன்களும்
அது ஒருவலையென அஞ்சினவே

கரைதனில் காவலன் கனிஉண வினைகொள
காத்திட இவளோ கரைநினைந்து
விரைந்திடநீர்வழிந் தலைதனில் வீழ்ந்திட
வேகுடல் நீர்சுட ஓடினமீன்
நுரையெழுமதுவினை நிறையிதழ் மேற்கினில்
கடல்விழு சுடுபழம்போல்சிவந்தே
நரைகரு முகிலினை நிகரிரு குழல்முடி
நடுநுத லசைவதில் அழகடைந்தாள்

புனையணி உடைதனை மதன்விடுகணைபட
பெருகிடும் தீயதைப் பொசுக்கிடுமே
எனமன மஞ்சிய சிறியவள் நிலைதனில்
அணிவதோ விடுவதோ எனமயங்க
கனமொடு வளர்கனி நிலவெழப் பாலொளி
கவிந்தொரு தோட்டமென் றிருள்மறைய
தினவெடு தோளினன் இரவினில் யாசகன்
தேர்ந்திடு பசியொடு குணமழிந்தான்

பண்ணொடு இசைதரும் பளிங்கெனும் சிலைமகள்
பக்க மணைந்ததும் நுனிவிரலால்
விண்ணிடி மழையுடன் வருமொரு மின்னலை
விரல்தொடும் நினைவுடன் மெலவணைத்தான்
செண்டென பூவனம் செறிமலர் தேனுண்ணும்
வண்டெனநானென விதியமைத்து
தண்டினை காம்பினைத் தளிர்மலர்பூவினைக்
கொண்டவள் நீயென தேன் அளைந்தான்

Wednesday 11 July 2012

காதல் மறந்தனையோ?

              (தலைவன் ஏக்கம்)

தாவொன்று தீயென்று கேட்டது யார் - வானத்
தண்ணிலவுப் பெண்ணே தீய்ப்பதென்ன
பாவைநீ போவென்றும் கூறலென்ன - வண்ணப்
பால்வெண்ம திநீயும் போவதெங்கே
நாவெழும் சொல்கொண்ட மாற்றமென்ன - பின்பு
நான் கொண்ட காதலுக் கானதென்ன
தேவையும் போனதும்தென்றலென - ஓடித்
தேகம் தழுவமறுத்த தென்ன

சோவென்று பால்பொழி வெண்ணிலவில் - அவள்
சாயென்று என்னை மடியிருத்தி
சாவென்றே ஒன்று வரும் வரையும் -  உன்னைச்
சார்ந்து கிடப்பேனென் றன்றுரைத்தாள்
பூவென்ற உள்ளம் பொழுதிருளப் -  பல
பொய்யென்ற வண்ணம் எடுப்பதுண்டோ
நாவென்ற பக்கம் மெல்லா உருளும் - ஆயின்
நாமென்ற அன்பு புரள்வதென்ன

காவொன்றில் கோநடை கொள்ளவந்தால் - உடன்
வா என்ன போரென்று வாள்கொண்டதென்?
பூவென்றும் தேனென்றும் காணவந்தேன் - மனம்
பொல்லாவிழி கொண்டு என்னை வென்றாய்
நீவென்ற தாயின்று யார் சொன்னதோ - என்றன்
நெஞ்சில் சிறைகொண்டேன் உன்னை இங்கே
தூவென்றென் னைவிட்டுத் தூரம்செல்ல -அந்த
தெய்வம் விட்டவழி தீர்வு என்ன?

ஓவென்று உள்ளமுனை நினைத்து - மனம்
ஓடென்று உன்னெழில் பின்னலைந்து
நாடென்று நாடிப் பறித்தெடுத்து  - உன்னில்
நானென்று ஆகுமிவ் வேளைதனில்
தாயென்று உன்னன்பு காத்துநிற்க - நீயோ
தாமென்றும் தீம்மென்று துள்ளிவிட்டு
தேயென்று திங்களின் தேய்வளித்தால் -அந்த
தெய்வத்தின் நெஞ்சும் பொறுத்திடுமோ

ஆவென்று போற்றுமுன் அன்பு தனும் - சதி
யாரென்ன செய்யினும் அற்றிடுமோ
ஆவென்றேன் என்றிடும் பொய்மொழியைச் - சொல்லி
ஆகஎன் உள்ளத்தை ஏய்த்தனையோ
வாவென்று கோவுறை ஆலயத்தில் - அன்று
வந்து நின்றே மாலைகொண்டதென்ன
ஆவது தெய்வம் நினப்பதொன்றே - நீயும்
ஆயிரம் கொண்டென்ன மாறிவிடும்

Saturday 7 July 2012

அலரும் மலரும் அவளும்

            

(அவன் ஆற்றாமை)
ஒயிலன்ன நடை கடலின் அலைபுரைய நெளிகுழலும்
கையிலென்ன மலர் காந்தாள் காணுமெழில் மதியுறல
வெயிலென்ன விழிகூர்மை தருமான தகிப்பெழவும்,
துயிலென்ன விடுஎன்று துயர் செய்வள் நிகர்வாளின்

கொடும்வீச்சின் செயலொப்ப குளிர்காற்றின் கூர்மையது
விடும்வேலின் தகையன்ன விடலைஉடல் புயல்கடுப்ப
தொடுமலரின் கணைவீச்சில் துயரேய்ப்ப தருமிவளை
படும் கதிரின் ஒளிபுல்லின் பனியியைய உருகினவன்

(மலரின் ஆற்றாமை:)
வளையலொலி பெருகமலர் வடிவிற் றனை வென்றவளும்
அளைமேகக் கூந்தல் தனையடைய அதன்நறுமணமும்
விளையின்பம் தருநாற்றம் வியந்து மனம்சிறுமை கொள
களைபோமென் றெண்ணியுடன் கருகுவது போற்குவியும்

துளை மூங்கில் ஊதுமது தேடும்கரு வண்டிதழின்
மழைஈரம் மெழுகுஎழில் மலரிதழில் இல்லையென
இழையொத்த இடைகொடியின் இசைநளினஎழில் போதை
விளை வகையும் கண்டு தனை விடுமென்று மீளலரும்

(அவளோ)
வளைகொடியின் மலரும் கணம் மலருவதும் ஒடிவதுவும்
முளைபயிரின் பசும்தனை முகமதிடை புனையிவளும்
சுளை தேனில் ஊறும்இனி சொல்மீட்டும் கருவிமலர்
களைகொண்டு விரியும்கணம் கருவண்டில் அஞ்சிவிடும்

Sunday 8 April 2012

மேற்கடி வான் சந்திரனோ


மேடை ஆடும் நாடகத்தின் இடைவெளிதான் - நான்
மெல்லச் சுற்றும் பம்பரத்தின் நிலையடி காண்
ஆடை மாற்றிக் கொள்வதென்ன அழகடிதான் - நீ
அன்பை மாற்றி கொண்ட தேனோ அழவடி நான்
தேடி யேதும் கொண்ட தில்லை இதுவரைதான் - நான்
தேவ ராஜ சோபை கொண்ட உருவடி காண்
பாடிப் பார்த்துங் கதவு திறக்க இலையடியேன் - உன்
பாசமுள்ள இதய வாசல் இரும்பெனவோ?

செய்துவைத்த சிலையென் றெண்ணித் தள்ளினையோ - நான்
தெருவில் வீழ்ந்து உடைந்தபோது உருகினையோ
கொய்த மலர் வாடு மென்று அறிந்திலையோ - நான்
கொட்டி விட்ட தீயில் காலை வைத்தவனோ
எய்த அம்பு பட்டு உள்ளம் சிதறியதோ - நான்
எழுந்துநிற்க உனது வானம் இருண்டதுவோ?
நெய்த சேலை மேனி கொண்ட நிலவொளியே - நீ
நீல வான மென் மனதின் பௌர்ணமியே

மானம் காக்கச் சேலைசுற்று மேனியளே - உன்
மாமன் உள்ளம் காக்க ஏது மறந்தனையே
போன காலம் மீண்டும் எண்ணி அழுதிடவோ - இப்
பொன் நிகர்த்த வாழ்வு நாளும் பழுதிடவோ
வானம் பூத்த மின்னு மந்த தாரகைகள் - என்
வாழ்வில் காண எண்ண வார்த்தை பொய்த்ததென்ன?
கான கத்தில் நள்ளி ராவில் கால்தடுக்கி - எனைக்
கருங் குழியுள் வீழ்த்திக் கண்டு சிரித்ததென்ன?


பொய் விழுந்து நெஞ்சம் என்னும் பாலினிலே - ஓர்
புகையெழுந்து நஞ்சுஎன்று மாறுவதேன்
கையெழுந்து  தெய்வமென்று நான்தொழநீ - ஓர்
காலன் போல வந்து நின்ற காட்சியென்ன?
மையெழுதும் கண்கள்கொண்ட பெண்ணிலவே - நீ
மறந்ததேது மலரவீட்டு முற்றத்திலே
செய்வதென்ன சாகசமோ தந்திரமோ -நீ
செந்நிறத்து மேற்கடி வான் சந்திரனோ

Monday 26 March 2012

போனால் போகட்டும் போடி!

ஆனா ழானா கூனா டானா இன்னன்னா
அலரும் பூவில் இதழைக் கண்டேன் அதிலென்ன
ஆனா வானா ளீனா லூனா இம்மான்னா
அதனைக் கண்டேன் அருகில் நின்றேன் அழகென்ன!
மானா தேனா மகிழம் பூவோ என்னென்ன
மனதில் தோன்றும் உணர்வை நானும் என்சொல்ல
பேனாக் கொண்டு எழுதப் போதாப் பொழுதென்ன
பிறந்தே ஒருநாள் போகும் அளவோ முழுதென்ன

கானா நெடிலும் பக்கம் தானா  இல்லன்னா
கொண்டே உள்ளம் கனியத் தமிழாம் அதுவென்ன
தீனா ரூனா மானா கானா இள்ளன்னா
திகழும் அழகில் தெருவில் வந்தால் ஊரென்ன
தானாச் சுற்றும் உலகம் கூடப் பின்செல்ல
தனியே நானும் நிற்பே னோஎன் தலைபின்ன
பூநா டும்புள் ளினமே போலும் செல்லென்ன
பொழுதும் வாடும் எண்ணம் என்னை முன்தள்ள

ஏனோ உள்ளம் தேனாய் தித்திக் கும்மின்ன
திங்கள் செல்லும் திசையில் செல்லும் முகிலென்ன
நானா எந்தன் உள்ளம் ஆடும் பொன்வண்ண
நதியாய் ஓடித் தேடும் இன்னல் போய்முன்னை
வானாய் வானில் ஓடும் மேகப் பஞ்சன்ன
வடிவைக் கொண்டே வாழ்வில் இன்பம் கொள்ளென்ன
ஆநான் இன்றே பொறுமை விட்டேன் நடையன்ன
நளினச் சிலையின் மனதில் எதுதான் உளதென்ன

போனா என்சொல் வாளோ சொல்லும் பதிலென்ன
புதிராய் கண்டும் போனே னெந்தன் கால்பின்ன
காணா வகையில் நின்றாள் கையில் கடிதென்ன
காலின் அடியில் தேயும் அதனைக் கைகொள்ளத்
தானாப் பொழியும் மழையும் இடியும் மின்மின்ன
தருமே திகிலும் அதுபோல் கண்டேன் இதுவென்ன
மீனாம் கண்கள் எரியும் மலைவாய்த்  தீயென்ன
மிஞ்சக் கண்டே ஆனேன் தீமுன் பனியென்ன

Friday 2 March 2012

தென்றல் விடு தூது

தென்றலே நில்லடி தேடிஅலைந்தனை
தோல்வி கண்டு துவளாதே - அன்று
சென்றவர் வந்திடத் தெய்வந் துணையுண்டு
தேம்பி அழுவதுவீணே - தினம்
முன்றலில் மல்லிகை முல்லையும் தொட்டுநீ
மெல்ல ஓடித்திரிவாயே - இன்று
துன்பமே எம்முடை சொந்தமென் றானதோ
தோழி எனைப் பிரியாதே

கண்களும் நீரிடக் கன்னங்கள் ஊறிடக்
காணு கின்றோம் எதனாலே - அவர்
பெண்களும் கல்லென எண்ணியும்பேசிடப்
பூவெனப் பொய்யுரைப் பாரே - அதோ
வெண்ணில வுப்பெண்ணும் வெட்கம்விட்டேதினம்
விண்ணில் தேடித் திரிந்தாளே- அவள்
கண்ணிலே வானொளி காணும்வரை சுற்றிக்
கட்டுடலும் மெலிந்தாளே

அந்தர வானிடை யெங்குமலைந்திடும்
ஆசைநிறை தென்றலாளே - நீயும்
சுந்தர மாவுல கெங்கணும் சுற்றுவை
செல்வழி என்னவர் காணின் - உடன்
இந்தவோர் செய்தியை எப்படி யாயினும்
இட்டுவி டென்னவர் காதில் - இவள்
எந்தளவோ துயர் கொண்டனள் இங்கென
உண்மை தொட்டுச் சொல்வாயே

சந்தணமேனியும் சஞ்சல மாக்கிடும்
சிந்தனை செய்மதி ரண்டும் - இவை
எந்தன்மன துடன் கொண்ட பகைத்தனில்
என்னைப் பிரிந்திடக் கூடும் -ஆயின்
இந்த நிலைவரின் செய்வதென்ன பிழை
என்ன தல்லஅவ ராகும் - எனை
நிந்தைசெய் தெங்குநீர் வாழினும் தூற்றிடும்
நிச்சயம் ஊர்வரும் நாளும்

முந்தியுடல் வலிகொண்டு பகைத்திட
முன்னெழுந் தென்னுயிர் ஓடும் - அதில்
எந்தனின் சந்தண மேனிவிதி யென
இச்சை யுடன்தீயை நாடும் - எவள்
சுந்தரியோ என்ன மந்திரமோ உமைச்
சுற்றிய மாயங்கள் தீரும் - இனி
வந்து பிணக்கினைத் தீர்த்துவிடு மன்றேல்
வாசலில் சங்கொலி கேட்கும்


Monday 27 February 2012

மலரோ? மகளோ?



இதழ்பூத்து மதுஊற்றி வழிகின்றது- அது
எதையூற்றி இதயத்தைப் பிழிகின்றது
மகிழ்வேற்றி மனதோடு இழைகின்றது - அது
மலர்வாகி இசைராகம் பொழிகின்றது
அகிலேற்றிக் கரம்தீப ஒளிகூட்டுது - அந்த
அனலேற்று மொளிபொன்னில் எழில்காட்டுது
நுதலோடு விரிவானக் குழலென்பது - அதில்
நிதம் மாறும் நிலவொன்று ஒளிர்கின்றது

அலைகண்டு நடைதந்து வளமாக்குது - அதில்
அலைகின்ற நினைவெங்கோ தொலைகின்றது
மலையோடு மழைகூடி நதியாகுது - அது
மடிகொண்ட பிரவாகம் மனங் காணுது
தலைமேவி நீரோடில் பெருவெள்ளமே - இத்
தவிப்போடு நிதம்காணும்  இளநெஞ்சமே
கலையின்ப இசையார்க்கும் எழில்வீணையோ - அதை
காணதவிழி கூறும் அதுதான் இதோ!

கனிதூங்கு மதைக் காத்துக் கிளிஏங்குமோ - அது
கதைபேசும் வகைபோலும் குரல்நாதமோ
பனிதூங்கும் புல்போர்த்த பசும் மேடையோ - அதில்
பகல் காணும் ஒளிக்கீற்றின் பிரகாசமோ
தனியாக எவர்கொண்டு உருவாக்கினார் அதைத்
தரநூறு வகை வண்ண மெருகேற்றினார்
இனிதேவர் உலகத்தில் இடம்மிஞ்சுமாம் - ஏன்
இவள்வீட்டின் முன்னாலிந் திரலோகமாம்

Monday 6 February 2012

காதல் மயக்கம் 1

1. மாலையின் மயக்கம்

வானமெனும் மகள்மேக இதழ்தனை
வண்ணம் சிவப்பினில் சாயமிட
தேனுமினிய பொன்மாலை யிளங்காற்று
தேடி அலைந்தென்னை தீண்டவர
ஞானம் அறியும் நற்கோவில்களில் மணி
யோசை எழுந்து பரவிவர
போனதிசையினில் கால்பதித்தே யந்தப்
பூமிதனிலே நடந்து சென்றேன்

வானரக்குஞ்சுகள் வாழைமரம் முறித்
தோடின வாயில் பழம்திணித்து
சேனை வயல்கதிர் நெல்முறித்துகொண்டு
சேர்த்தன பச்சைகிளி பறந்து
கூனை எடுத்தகதிர் வளைந்து நிலம்
கொஞ்சின மண்ணை வளர்த்ததுக்கு
கானமிடும் பலகானக் குருவிகள்
காற்றில் பறந்தன சத்தமிட்டு

வீசி அடித்தது காற்று மரத்தினி
லோடிக் குதித்தது சின்ன அணில்
பாசிபிடித்த வயல் குளத்தில் நின்று
பாவம் தவித்தன தாமரைகள்
பேசிச் சிரித்திடும் பெண்குலத்தோர் கரை
மீதிருந்தி அள்ளிநீர் தெளித்து
கூசி சிரித்திட்ட கோலம் கண்டேநடை
கொண்டனன் எந்தனோர் பாதைகண்டு

நானும் நடந்தொரு தூரம்சிறிதிடை
நாடும் பொழுதினில் கண்ணெதிரே
கூனும் விழுந்து நரைதிரண்டு தடி
கொண்டொரு மாது அருகில்வந்தாள்
வானும் நடந்தமுகிலெனவே பஞ்சை
வார்த்தன வெண்ணிற கூந்தல்முடி
மீனும் நடமிடும் ஆழிதிரையென
மேனி சுருங்கித் திரைந்திருக்க

கண்ணினொளி சிறுத் தாகிவிட ஒரு
கையை எடுத்துஇமை பொருத்தி
அண்மையில் வாஎன கையசைத்து ஒரு
ஆணையிட்டால் அந்தமூதாட்டியார்
எண்ணியென்னவென நான்நினைத்தே அயல்
ஏகமுதல் கணீரென்ற ஒலி
தண்ணிலவின் தங்கை சின்னவளாய் மணி
தாளமிடஒரு தோகை நின்றாள்

எங்கு சென்றாயடி சின்னவளே என்று
ஏதோ நினைத்து முணுமுணுக்க
தங்கமகள் அவர் ரண்டு உருவமும்
தன்மைகண்டு நானும் எண்ணிநின்றேன்
பொங்கி வள ரிளம் பூரிப்புடன் எழில்
புத்தம்புது மலர் போலிருந்தாள்
சங்கு எனும் வெளிர் மின்னும் முகமதில்
சந்திரவண்ணக் குளுமை கண்டேன்

பிஞ்சென நின்றவள் நாளைவளர்ந்திடப்
பின்னல் கலைத்தொரு கொண்டையிட்டு
வஞ்சியென் றாகவளர்ந் தொருக்கால் நல்ல
வாழ்வின் சுவைகண்டு தான்மகிழ்ந்து
நெஞ்சமுவந்து கதைபடித்துப் பல
நீளவிழிசிந்தும் நீர்துடைத்து
வெஞ்சினம் கொண்டும் வியந்து பலபல
வேடிக்கையால் மனம் புன்னகைத்து

இந்த உலகினில் வாழ்ந்து முதிர்ந்துகோல்
கொண்ட முதியவள் போல் குனிந்து
விந்தை வளைந்து நடந்திடுவாள் இது
வேடிக்கையானொரு வாழ்க்கையன்றோ?
சந்தடி என்னை உலுப்பிவிட நானும்
சற்று நிமிர்ந்தயல் பார்த்திடவே
சிந்து நடைமகள் புன்னகைத்தே யெனைச்
சற்று நாணமிடச்செய்து சொன்னாள்

கண்களிரண்டதும் துள்ளும்கயலெனில்
காணுமுகமதி பொய்த்துவிடும்
வெண்ணிலவானது வட்டமுகமெனில்
வண்ணஇதழ் கொவ்வை பொய்த்துவிடும்
எண்ணீயிவைஇதழ் கொவ்வைஎனில் அங்கு
எப்படி உள்ளிடை முத்துக்களோ
அண்ணளவாய் இவைஒன்றுமில்லை அந்த
இந்திரலோகத்து பொற்சிலையோ

பொன்னும் பளிங்கதும் போதாநவமணி
கொண்டு செதுக்கிய சிற்பமதோ
என்னும் பிரமனும் இத்தனைநாளில்லா
அற்புதம் செய்ய விளைந்தனனோ
மின்னும் அழகுடன் என்னயல் நின்றவள்
மூத்தவள் தன்னை விழிசரித்து
”என்னுடை அன்னையைப் பெற்றவளாமிவள்
இன்று தனதில்லம் மீளுகிறாள்

அன்னவளால் இனி ஆகமுடியலை
ஆடி நடைதளர் வாகுகிறாள்
இன்னுமடைந்திட நீண்ட தொலையுண்டு
எப்படிசெல்வது நானறியேன்
தன்னந்தனிதுணை வந்துவிட்டேன் ஏதும்
தக்க உதவிகள் செய்குவீரோ
என்னசெய்வேன்” என்று இரண்டுமலர்க்கரம்
ஏந்தும்விரல்கள் பிசைந்து நின்றாள்
(தொடரும்....)

காதல் மயக்கம் 2




2. இளமை மயக்கம்

கண்களிரண்டதும் துள்ளும்கயலெனில்
காணுமுகமதி பொய்த்துவிடும்
வெண்ணிலவே இந்த வட்டமுகமெனில்
வண்ணஇதழ் கொவ்வை வந்ததுபொய்
எண்ணீயிவள்இதழ் கொவ்வைஎனில் அங்கு
எப்படி உள்ளிடை முத்துக்களோ
அண்ணளவாய் இவைஒன்றுமில்லை அந்த
இந்திரலோகத்து பொற்சிலையோ

பொன்னும் பளிங்கதும் போதாநவமணி
கொண்டு செதுக்கிய சிற்பமதோ
இன்னும் பிரமனும் இத்தனைநாளில்லா
அற்புதம் செய்ய விளைந்தனனோ
மின்னும் அழகுடன் என்னயல் நின்றவள்
மூத்தவள் தன்னை விழிசரித்து
”என்னுடை அன்னையைப் பெற்றவளாமிவள்
இன்று தனதில்லம் மீளுகிறாள்

அன்னையவள் இனி ஒரடிகூட
எடுத்துநடந்திடும் ஆற்றல் கெட்டாள்
இன்னுமடைந்திட நீண்ட தொலையுண்டு
எப்படி என்று மயங்குகிறேன்
தன்னந்தனிதுணை வந்துவிட்டேன் ஏதும்
தக்க உதவிகள் செய்குவீரோ”
கன்னம் விழிமழை கண்டிடுமோ என்னும்
வண்ணம் விரல்கள் பிசைந்து நின்றாள்

கிண்ணமதில் விரல் சுண்டியதால் வரும்
கிண்ணெனும் நாதக் குரலெடுத்து
மண்ணிற் பெரும்வீர மாமறமும்வந்து
மண்டியிடவைக்கும் பேரழகில்
எண்ணிக் கணக்கிடா ஆண்டவனும் அள்ளி
இட்டபொலிவுடன் நின்றவளோ
வண்ணமுகத்தினில் சோகமுறச் சொன்ன
வார்த்தைகண்டு மனமாவலுற்றேன்

சற்று தொலைவினில் சுந்தரத்தின் பையன்
சுற்றிவளைந்தொரு மாட்டுவண்டி
விற்றுவிட பெரும்சந்தையிலே பழம்
வைத்தொரு கூடை இறக்கிவிட்டு
நிற்பதைக் கண்டு மனம்மகிழ்ந்து - அந்த
நீலவிண்ணின் மதிதங்கையினை
உற்ற வழிஒன்று தோன்றியதேயென
ஓர்பயமில்லையென் றாற்றுவித்தேன்

முன்னம் இருந்தவன் சின்னவயதினன்
மெல்ல அணுகிநான் சேதி சொல்ல
அன்னமெனும் எழில்மங்கை தனைகண்டு
ஆவல் மீறத் தலையாட்டி வைத்தான்
அன்னை தனும் அவள் ஆக இருவரும்
அந்தியிருள் மூடும் வேளையிலே
இன்பமுடன் சென்று வாருமென்றேன் இந்த
ஏழை பெரிதும் உவகை கொண்டேன்

கண்ணை விழித்தனள்அச்சம்கொண்டு அந்த
கட்டழகன்தனைச் சுட்டியொரு
எண்ணமதில் பயம்கொண்டேன் அவனிங்கு
என்னை விழிப்பது ஏற்றதன்று
உண்ணுமதுவென கண்களினால் ஏதோ
உள்ளேநினைந்தவன் புன்னகைத்தான்
அண்ணா நீங்கள் கூடவந்திடுவீரென
ஆவலுற முகம் பார்த்துநின்றாள்

கூடிப்பயணமும் செய்வதென அவள்
கேட்கமனம்  கொண்டு சம்மத்தித்தேன்
ஆடிச் சிறுவழி ஒடி நடந்திடும்
ஆனந்த வண்டியில் நாம் புகுந்தோம்
தேடித்திசைதனில் போகும்வண்டிதனின்
துள்ளுமெழில் அலைபோலசைய
பாடிக்களித்திட எண்ணியவனொரு
பாட்டிசைத்தான் முன்னேபாதைகண்டோன்

(அவன் பாடுகிறான்)
ஆத்தினிலேவெள்ளம் வந்து அலையடிக்குது
அதிலிரண்டு கயல்புரண்டு துடிதுடிக்குது
சேத்தினிலே பூமலர்ந்து சிரித்துநிற்குது
செங்கனியின் வண்ணமுடன் செழுமைகாணுது
நேத்துவந்த மாமனுக்கு நெஞ்சு குளிருது
நிலவுவந்து நேரில் நின்று ஒளியைவீசுது
சாத்திரங்கள் பாத்துபாத்து சரியென்றானது
சாமிகூட பூவிழுத்தி சம்மதிக்குது

வாத்தியாரு பெத்தபொண்ணு சட்டம்பேசுது
வந்துநில்லு பக்க மென்றால் வாதம்பண்ணுது
கூத்தடிச்சுச் சின்னதோட கூடியாடுது
குழந்தையாக அழுதுகொஞ்சம் கோவம் கொள்ளுது
பாத்துப் பாத்து எத்தனைநாள் காவல் காப்பது
பழமிருக்கு பக்கத்திலே பொழுது மாளுது
காத்தடிக்கும் வேளையிலே தூற்றத்தோணுது
காட்டுமலர் தோற்றத்திலே கண்ணைஇழுக்குது

முன்னிரவு குளிரடிச்சு மேனி நடுங்குது
மூச்சினிலேபூவின் வாசம் மோகம்கூட்டுது
பின்னிலவு தூக்கம்விட்டு என்னைஎழுப்புது
பேசவென்று எவருமில்லை பாவம் விதியிது
கன்னி யவள் நெஞ்சம் காணும் காதலானது
காணும் பச்சை இலைமறைத்த காயென்றானது
சின்னப்பொண்ணு கண்ணசைவில் என்னசொல்லுது
சேர்ந்திடலாம் என்பதனை தின்று விழுங்குது

******************

பாடியவன் கடைக் கண்ணெடுத்துஅவள்
பாவைதனை இடை நோக்குவதும்
ஓடிய மாட்டினை ஓங்கிவிரட்டியே
ஒன்றுஇல்லையென காட்டுவதும்
தேடியே காதலை திங்கள் முகவிழி
தேன் மலராளிடம் காத்துநிற்க
ஆடிய வண்டியின் ஆட்டத்திலேஅவள்
அல்லியென நடமாடிநின்றாள்

மெல்ல அவள்மனம் மாறியதோ இந்தப்
மாயமனம் தன்னை நான் அறியேன்
கல்லும் கரைத்திடும் கட்டழகைகொண்ட
காளை அவன் விழிமோதிடவே
வல்லமன தனல்நெய்யெனவே விட்டு
வாசமெழ வழிந்தோடக் கண்டேன்
நல்லதுவோ இல்லை அல்லதுவோஅதை
நானோ புரிந்துகொள்ளாது நின்றேன்.

மேலைத் திசையினில் மேகம்கறுத்திட
மாலைக் கிழவனும் ஆடிவந்து
வாலைக்குமரி யென்றாடும் சுழல்புவி
வண்ணமகளிடம் மாயமிட்டு
ஓலைபிரித்தொரு மந்திரம்சொல்லிட
ஓடிக் கருத்தது விண்ணரங்கு
ஆலைமுடிந்தொரு சங்குகள் கூவிட
ஆடிப்பறந்தன வான்குருவி

தென்றலணைந்தங்கு வீசியதுஅது
தேகம் வருடியேஓடியது
நின்றமரங்களின் மீதுஅதுபட
நெஞ்சை நிமிர்த்திச் சிரித்தன காண்
குன்றதன் பின்னே குடியிருந்த மதி
கோலமிட்டு முகம் பொன்குழைத்து
நன்றெனப்பூசி நளினமிட்டே விண்ணில்
நானிலம் காண நடைநடந்தாள்

உள்ளம் மயங்கிடும் வேளையது மேனி
உணர்வு வென்றிடும் நேரமது
கள்ளைஉணவென்று உண்டதென இரு
கண்ணும் மயங்கிடும் மாலையது
தெள்ளெனும் நீரினில் கல்விழுதலெனக்
கன்னியின் உள்ளம் கலங்கியதோ
மெள்ள அவனதைக் கண்டுகொள்ள அந்த
மேடையில் நாடகம் கண்டுநின்றேன்

(தொடரும்)

Tuesday 24 January 2012

இன்று மிஞ்சினள்! நாளை கெஞ்சுவள்!

மானென் றிடவேழம் மதமெடு
பூவும்பொலி தேனென் றழகொடு
நானும் உயிர்தானும் துடிபட
காணும் அவைதேரென் றுலவிட
வானும் மழைகாணும் சிறுமயில்
ஆடும் எனப்பூவை நடைகொள
ஏனோ கனவாகும் நினைவினைக்
காணும் மனமேகு மதனிடை

பாலும் பழநீரும் கலந்திடப்
பாயும் மதிதாரு மொளிகொள
நூலும் எனக் காணு மிடைகொள
நூறும் எனயாரும் அளவிட
மேலும் பலமின்னும் நினைவெழ
மேனிமழை கொண்டோர் நிலமென
ஆலும் அதுதாரும் நிழலென
ஆசைமொழி கூறிக் குளிர்தர

சேனைபடைகொண்டோ அரசெனச்
சீறும் பெருவேங்கை திமிரென
தான்ஐம் பொறியாவும் ஒருங்கிடத்
தாரும் பெரிதாகும் சுவையென
பூநெய்தனை உண்ணும் உயிரெனப்
போதில் இரவில்லை வருமொரு
ஏனைஎழில் கொள்ளும் பகல்கெட
இரண்டு முறவாடும் கருகலில்

தானும் எமனாகி உயிர்கொளத்
தாவும் எருதேறும் செயலென
ஊனும் உருயாவும் உருகிட
உள்ளம் மெழுகாகி இளகிட
கோனும் அவன் கொடிதோர் வாளினைக்
கொண்டே இருகண்கள் வீச்சிட
நானும் அழிவேனோ என்னுடன்
நாளும் உயிர் கொல்வாள் போரிட !

நாளும் வரும் என்னைத் துணையென
நாணம் உற நல்லோர் பொழுதினில்
தோளும் வலி கொள்வோ னிவனிடம்
தோற்றே னெனத் துறவிப் தனமொடு
நாலும் அதில் நாணம் மிவைகளை
நூலும் மலர்மூடும் பனியிடை
கோலம் நிலவென்றே நிகரிட
கொடுமை தனை விளையென் றுழறுவள் !!

Sunday 8 January 2012

காதலைப் பாடுவதா?

          
குருதிப் புனலும் சதையும் கொண்டே குலவும் ஒருபோதில்
மருகிக் கணமே மின்னல் போலும் மாயை சுகம் காட்டும்
உருவைத் தொழுதே தினமும் பாடும் ஒருவன் கவியாமோ
திருவைத் தொழுதலின்றி இதுவே தினமும் தொழிலாமோ?

நிலவை அழகென் றுலகில் நின்றே கண்டால் அழகாகும்
நிலவில் நின்றால் மண்ணும்தூசும் வெறுமை என்றாகும்
சிலையில் பெண்ணை வடிக்கும் சிற்பி செயலை வியந்தோரின்
கலையென் றுள்ளம் ஏற்கும் கவியில் கண்டால் பிழையாமோ

மதனை ரதியை மனதில் கொண்டால் மறுவென் றிகழ்வாமோ
அதனைப்பாட அடிகள்கொண்டால்  ஆக்கம் பழுதாமோ
எதனைப் பாடக் கவிஞன் எண்ணம் எழுமெப் பொருள்யாவும்
உதவிக் கவிதைக் கருவாய் பொருளாய் உருவம் பெறும்மாறும்

உணர்வில் உயிரில் ஊற்றும்வண்ணக் குழம்பைக் கைக்கொண்டு
கணமும் நில்லா துலகத்திரையில் காட்சி ஓவியமாய்
தணலைத் தீயைத் தண்ணீர்க் குளுமை தருமாம் எதுதானும்
கணமே தீட்டும் கலைஞன் கையில் கட்டும் விலங்கில்லை

பெண்மை அழகுஎன்றால் என்ன பிழைகள் அதிலுண்டு
பெண்ணே இல்லா வாழ்வுகொண்டார் பாரில் எவருண்டு
பெண்ணி லழகைகண்டோர் அதனைபேசல் பிழையென்றால்
மண்ணில் தமிழின் கவிகள் பலதும் மறைந்தேபோகாதோ

உலகம் எங்கே  உதயம்கொண்டாய் உந்தன் வரவறியேன்
கலகம் செய்யும் விண்ணின் தீயின் கடிதோர் சுடுகோரம்
வலமும் புறமும் இடியும் வெடியும் இவைகள் தாமறியேன்
நிலமும் கண்ட நாளில் இருந்தே உலகை நானறிவேன்

புவியில் மரமும் செடிகள் கொடிகள் மலரை நான்கண்டேன்
ரவியும் மதியும்முகிலும் விண்ணின் மீனும் நான்கண்டேன்
குவியும் விரியும் மலரில் அழகைக் கொட்டி வைத்தவரே
கவியில் காட்டும் பெண்ணிலெழிலைக் காணச்செய்கின்றார்

மனிதம் என்னும் அழகைக் கலையின் கண்ணால் அதைநோக்கி
மனதில் குற்றம் இல்லா துணர்வு கொண்டால் மகிழ்வாமே
அழகை அழகென் றுள்ளம் சொல்ல அதற்கோர் வயதில்லை
மலரை எழிலென் றெழுதும் கைகள் மாற்றம் தேவையில்லை

அழகு என்ப தெதுவும் பொருளில் இலதாம், விழிகொண்டே
பழகும் மனதின் பார்
வைகொள்ளும் உணர்வே எழிலென்றார்
மழலைசெல்வம் மடியில்தூங்கும்  அழகை விழிகாணும்
குழலில் பூவைச் சூடும் வதனம் எழிலும் அதுபோலும்

காதல் பாதிப்பு

பூவைக்காண மோகம் கொண்டு போகும் தென்றலே
 போதை கொண்டு கூடிஆசை போன பின்னரே
தேவையில்லை என்றுவிட்டுத்  தள்ளிச்சென்றதேன்
 தீயில்வெந்த தாகப் பூவும் தீய்ந்து வாடுதே

ஓடிவானில் நீந்திப்போகும் ஒற்றைமேகமே
  உண்மை காதல் கொண்டுநீயும் வெண்ணிலாவையே
தேடிவந்து முத்தமிட்டதென்றே எண்ணினேன்
  தென்றல்போல நீயும் விட்டுத் தூரச் சென்றதேன்

நீரிலாடும் ஆம்பல்மீது நின்றுதேனையே
  நீயும் உண்டுஇன்பம்காணல் நேர்ந்த பின்னரே
சேரும் எண்ணம்நீங்கி நீயும் செல்வதேனடா
  சில்லென்றூதும் வண்டே நீயும் செய்வதென்னடா

காலைவந்து வானெழுந்த காதலாதவன்
கோலம் போடும் நீரலைகள் கொண்டதாமரை
மேலெழுந்த பூமுகத்தை வாடசெய்யவதேன்
மாலைதன்னில் போயொழிந்து மோசம் செய்வதேன்

காலம் சொல்லும்நீதி எங்கும் கயமைதானடா
 காவல் செய்ய யாரும்,இல்லை கண்ணீர்தானடா
ஞாலமெங்கும் நேர்மை காக்க யாருமில்லையா
 யாரைநானும் குற்றம் சொல்ல யாவும் தெய்வமா

பூவில் வண்டில் புள்ளி னத்தில் போயும் மக்களில்
தாவி ஒன்றோடொன்றில் இன்பம் தேட வைத்ததேன்
தூவி நெஞ்சில் காதல் என்னும் தூபமிட்டவன்
தேவி,பெண்மை தோல்வி என்றால் தீமை காண்பதேன்

Thursday 5 January 2012

காதல் ஓவியம்

மாலை இருள் உலகைச் சூழ்ந்துகொண்டிருக்கிறது. அது ஒரு வசந்தகாலத்தின் முன்னிரவுநேரம். கதிரோன் மறைந்து இருள் சூழ்ந்துவிட்டபோதிலும் இளங்கதிரின் விட்டுச்சென்ற வெம்மை காற்றில் இன்னும்தணியவில்லை.

அந்தச் சோலையின் மலர்களைக்கூடி நறுமணம் சுமந்த தென்றல் அங்கே
தனிமையில் நின்றிருந்த தலைவியின் கேசங்களை நீவி முகத்தில் மெதுவாக வெப்பத்தால் முத்தமிட்டுச் செல்கிறது காற்றுமட்டும்தானா?. காதலனும்தானே!
அவள் உள்ளத்தை பிரிவினால் சுட்டு வேக வைக்கிறான்!
எவ்வளவு நேரம்தான் காத்திருப்பது. அவள் முன்னால் இருக்கும் குளிர்த்
தடாகம் ஒன்றைப்பார்க்கிறாள். அதோ அந்த அல்லிமலர்கள் கூட சந்திரனின் வருகைக்காக அவள்போலவே தவம் கிடக்கின்றன.
அந்த அலைகள்கூட இவள் மனதைப்போல வரிசையாக எழுந்துஉணர்வுகளின் துடிப்பாக காணுகிறதே! அலைகளின் ஆட்டத்திற்கு தலையாட்டும் மலர் அவளின் மனம் அங்குமிங்கும் அலைவதையும் அதனருகே துள்ளிவிழும் கயல்மீன்கள் அவள்விழிகளின் துடிப்பையும் பாவனை காட்டி கேலி செய்வதுபோல் இருக்கின்றன.
ஆமாம் இதோ இந்தமலர்க்கூட்டம்கூட காற்றிலாடி தமக்குள் இரக்சியமாகப்  பேசிக்கொள்கின்றனவே! அவள் ஏமாற்றத்தைதானே முணுமுணுக்கின்றன
கோபம் கட்டுமீறவே பாடுகிறாள்

தேனென்று சொன்னான் தென்றலென்றான்
தீயாகி நின்றான் பெண்மை கொன்றான்
வானில் வளைந்த வண்ணம் என்றான்
வாஎன்று என்னை தன்னில் கொண்டான்
பூநின்றவாசம் போலே என்றான்
பூன்னகைபூத்தே என்னை வென்றான்
ஏனின்று என்னை ஏங்கவீட்டான்
என்ன மயங்கம் கண்டு நின்றான்

பூவாகமேனியில் போதை கண்டான்
புயலாக மாறியே புதுமை செய்தான்
நோவாகி உள்ளத்தை நெக்க வைத்தான்
நிழலாய்க் கலந்துமே சொக்க வைத்தான்
நாவான பொய்த்தே இந்நங்கை தன்னை
நலிந்தே உடல்நோக நெஞ்சம் கொண்டான்
சாவாகும் மேனியை சற்றேவந்து
காவாக்கால் தீயாகும் தேகமன்றோ!

காற்றுக்கு கட்டளை இடுகிறாள்.தென்றல் குளிர்ந்திட ஆரம்பித்துவிட்டது. நிலவும் எழுந்து பொன்னொளி பரவ
ஆரம்பித்துவிட்டான். காதல் ஏக்கம் கசப்பாக மாறுகிறது. கண்கள்
சிவந்துவிட்டன கோபத்தாலா? தூக்கத்தாலா? அப்போது அங்கே யாரோவரும்
ஓசை கேட்கிறது. அதை அறியாமல் அவள் பாடுகிறாள்

துடித்தே கண்கள் துவள்கிறதே
வெடித்தே நெஞ்சம் அழுகிறதே
வடிந்தே யிருளும் முடிகிறதே
மடிந்தே உள்ளம் குமுறுதுவே


எவளோ ஒருத்தி கண்டனனோ
இவளை மறந்து நின்றனனோ
குவளை நிறைதேன் நீயென்று
அவளை இனிதாய் கண்டனனோ

தடந்தோள் கொண்டான் தவறியதேன்
மடந்தை என்னை மறந்ததும் ஏன்
கிடந்தே யுள்ளம் துடிக்கிறதே
விடந்தான் முடிவே கொல்லுகிறேன்

அண்மையில் நின்றிருந்த அலரிப் பூச்செடியிலிருந்து ஒருகாய் பறித்து உண்ண
முயல்கிறாள். அப்போது ஒருகுரல் ஒலிக்கிறது

காதல் காதல் காதல் என்று
காதல் எண்ணிக்காயும் மகளே
காதல் போயின் சாதல் என்றால்
காற்றுக்குலகில் வேலை இல்லை

காதல் கண்டு தோற்கும் மாந்தர்
காணுமுலகில் மாளச் சென்றால்
ஊதல் மூச்சும் உயிர்கள் இன்றி
ஒற்றை உலகு சுற்றும் வீணில்

தேனை உண்டு தித்திக் காமல்
தீயை உண்ணத் தேர்ந்தாய் பெண்ணே
போனால் தேகம் பின்னே வாரா
புரியாதவளோ பொய்க்கும் வாழ்வு

தாகம் கொள்ளல் தேகக்குற்றம்
தனிமை கொள்ள மனதே நோகும்
நாகம் கக்கும் நஞ்சைப்போலே
நாளும் விரகம் தேகம்கொல்லும்

ஆகக் காதல் ஒன்றே உலகின்
ஆகிக் கொண்ட இன்பமில்லை
போகப்போக மனமே யாறிப்
புதிதாய் வாழ்வு கொள்வாய் பெண்ணே

மோதல் கொண்டு முனையும் வாழ்வில்
மூச்சை நிறுத்த முயலாதென்றும்
காதல் போயின் வாழ்வை வென்று
காலம் சொல்லும் பாதை செல்வாய்

தலைவி திடுகுற்றுத் திரும்புகிறாள். ஒரு முதியவர் நிற்கிறார். இதுயார்
இவரெப்படி இங்கே?
”யார் நீங்கள்?” என்கிறாள். முதியவர் சிரிக்கிறார். அவள் திகைக்கிறாள். இந்த
இரவு நேரத்தில். இவருக்கு இங்கே என்னவேலை. ‘யார் நீங்கள் பெரியவரே
கூறுங்கள்’
அவர் சிரித்தபடி ’உனைக் காப்பது என் வேலை’ என்று கூறிக் காற்றில்
மறைந்து போகிறார்
அந்தவேளையில் அவள் தோழிஒருத்தி தலைவியை நீண்டநேரம் காணாது
தேடிவருகிறாள். தன் தலைவி திகைத்து நிற்பதைக் கண்டு என்னவென
விசாரிக்கிறாள்.

தன் கவலையைக் கூறி அவள்மீது தலைசாய்த்து கண்களை மூடுகிறாள்
தலைவி. கண்ணிலிருந்து நீர் தாரையாக வழிகிறது.
தோழிஅவளை ஆறுதல் படுத்துகிறாள்


முடிவுக்கு அவசரம் என்ன- மேனி
மூள்கின்ற தீ கொள்ள ஆசையும் என்ன
வெறுமைக்கு மனமானபோது -சூழ்
வெள்ளிக்குள் நிலவாக தனிமைநீ காணு

துள்ளியே நிலவோடும் வானில் - ஒரு
துன்பமும் கொள்ளவே இல்லையே நாளும்
அள்ளியே புன்னகை செய்து -அது
அழகாக வானிலே வருவதைப்பாரு


அவள் மடியில் படுத்த தலைவி சோர்வு மிகுதியால் அயர்ந்து மயங்கி
கிடக்கிறாள். அப்போது மென்மையாக் தோழி பாடுகிறாள்

புவிவானை வாவென்று சொன்னால்
பொழியாதோ மழைதூவி நன்றாய்
குவிவானில் கதிர் காணும் நேரம்
குளிர்காலை எனவாக வேண்டும்
செவி கேட்க கவி சொல்லும் சேதி
சிறிதாலும் கேட்காதுபோமே
ரவி வானில் எழுந்தோடி வருவான்
இரவென்னில் கதிர் ஏது செய்வான்

தளிரெங்கும்பூப் பூக்க வேண்டும்
தண்ணீரில் முகம் பார்க்கும் போலும்
ஒளிவீச இரவோட வேண்டும்
உயிர் கொண்டமீன் துள்ளவேண்டும்
களிகூடிப் புள்ளினம் ஆர்த்து
கலகலத்தெழுந்தாடவேண்டும்
வழிதோன்றி அவன்பாதைகண்டே
வரும் வரை தூங்கட்டும் நெஞ்சம்

கனவுகள் சுமையான நெஞ்சை
காற்றாக நீந்திடச் செய்யும்
மனம்மீது கற்பனை கொண்டால்
மாற்றாகித் துன்பங்கள் நேரும்
சினந்தானும் கவலையும் போக
சிறிதே நீ உறங்காயோ கண்ணே
நினவான தமைதி கொள் என்றும்
நிலையான துலகி லொன்றில்லை

மாறுதல் மட்டுமே வாழ்வாம்
மாறாத ஒன்றெனில் சாவாம்
தேறுதல் இல்லையேல் நாமும்
தினந்தோறும் ஒருதரம் சாவோம்
ஊறுகள் எதுவந்த போதும்
உரமுள்ள மனதோடு நின்று
ஏறுதல் தான்மட்டும் எண்ணு
இயற்கையே இழப்பென்று தள்ளு

தோழியின் தாலாட்டில் துக்கம் தணிந்திடவே இருவரும் இல்லம்நோக்கிச்
செல்கிறார்கள்.. விடிந்த்தும் சேதிவருகிறது, தலைவன் வரும்வழியில் ஏற்பட்ட
இடரினால் அரசகாவலர் அவன்பாதையை தடுத்துவிட்டனர் என்றும்
தலைவியிடம் வருத்தம் தெரிவித்து செய்தி அனுப்பியிருந்தான்
மகிழ்வில் தலைவியின் மனம் குதிக்க எங்கிருந்தோ பெண்கள் சேர்ந்து
பாடும்பாடல் ஒலிக்கிறது. அவள் உள்ளத்தில்சேர்ந்த உறுதியும் இன்பமும் பிரதிபலிப்பதாக!

வெட்டுமிடி வீழ்ந்தாலும் வேகோம் -கையில்
விளையாட மின்னலில் பந்துகள் செய்வோம்
கொட்டி மழை பெருகினும் தாழோம் -அங்கு
குளித்தேயோர் சுழிபோட்டு கரைநீந்தி எழுவோம்

தட்டுவோம் கைகள் தனைக் கோர்த்து பெண்கள்
தாண்டாத இடரில்லை காதலும் சேர்த்து
கட்டுவோம் வாழ்வென்ற வீடு ஒளி
காட்டுவோம் அன்பென்ற தீபமும் கொண்டு


பெட்டியில் பாம்பாகிச் சோர்ந்து - பெண்கள்
பெருமையை மறந்துமே தூங்குதல் நீக்கி
எட்டுவோம் இமயங்கள் தாண்டி! - நாமும்
எண்ணியே உலகையும் ஆள்வோம் நிரூபி!

Wednesday 4 January 2012

காதல் பைத்தியம்!

நீரைஉடைத்து நெருப்பைக் கிழித்தவள்
நெஞ்சிலுறைய நின்றேன் - பெரும்
வேரைஉடைத்து விழுத்தி மரமேறி
வெண்முகில் தாவிவந்தேன்
தாரையெனக் கொட்டும் வான்மழைத் தூறலைத்
தள்ளி நெளிந்து சென்றேன் - சிறு
தேரைஉருட்டிநற் தென்றல்வழி ஓடி
தேன்நிலாவில் தேடினேன்

கூரையி லேறிவான் கொட்டிய தாரகைக்
கூட்டத்தைக் கைபொறுக்கி - அதை
ஆரமெனக்கட்டி ஆனந்தக் கூத்திட்டு
அன்பில் அளிக்கவென்றே
ஈரமுகில் தொட்டு மோதவிட்டு அது
மின்னிய வெண்ணொளியில் - அங்கே
தூரம்கி டக்கின்ற கோள்களும் சுற்றிட
துள்ளிக் கடந்து சென்றேன்

மாலையில் வீசிடும் தென்றலின் பூமணம்
மெல்லப் பிரித்தெடுத்தேன் - அவள்
காலையில் வந்திடக் காயும் வெய்யோன் மீது
கையள்ளி நீர்தெளித்தேன்
மூலை, நிழல் இவைமீது நிறங்கொள்ள
முற்றும் வெள்ளையடித்தேன் -ஆயின்
சேலை அணிந்தவள் செல்லும்வழிகண்டாள்
சேரமுடிய வில்லை

தென்னை மரமேறிப் பாக்கும் கமுகினில்
தேங்காய் பறித்துவந்தேன் அந்தப்
பின்னை வளவுக் கிணறுதனைச் சற்று
பக்கம் இழுத்துவைத்தேன்
சொன்னசொல் மீண்டும் பறித்தெடுத்து குரல்
சொல்லை விழுங்கிநின்றேன் - அட
எண்ணில் நாலுதன்னை இரண் டிரண்டாக்கிடா
ஒன்றிட ஒட்டிவைத்தேன்

ஆனவகையினில் ஆகாதவேலைகள்
அத்தனையும் புரிந்தேன் - ஆயின்
ஏனோ அவள் மனம் எண்ணுவதேனென
ஏதும் புரிவ தல்லேன்
தேனோ மானோஇளந் தென்றலதோ எனத்
தேடியலைந்து சென்றேன் - ஆயின
வீணோ அவள்விழி ஓர்கணமும் என்னை
வேடிக்கை காணாநின்றேன்

கண்ணில் கனலெழில் கார் குழல் மாரியும்
கன்னம் பழமெனவும் அவள்
வண்ண நிலாமுகம் வீசும் காற்று மொழி
வேதனை பார்வைதரும்
எண்ணம் கனவிலும் ஏய்த்திடும் நெஞ்சமும்
ஏனோ மனதிற் கொண்டாள் - இள
வண்ணம் எடுப்பென வாய்த்தவளாம் இவள்
வந்து அணைப்ப தெப்போ?

Tuesday 3 January 2012

காதலெனும் போர்க்களத்தில்

காதலன்:
போரில்பகைகொண்டு வாளை உடைத்தவன் வீரம்அழித்துவிட்டேன்
நேரில்இவள்விழிப் பார்வைஉடல்படக் காயமடைந்துவிட்டேன்
தோளில்தினவெடுத்தே சுழன்றேபகை வெட்டிவிழுத்திவிட்டேன்
மோகமலர்விழி நோக்கில்தலைசுற்றி மேனிநடுங்குகிறேன்

சூழும்வினைசெய் சுந்தரியோஇவள் சூனியக்காரிதானோ
ஆளும்உடல்வலி தூரநின்றேகொல்லும் மோகினிப்பேயிவளோ
வேலொடுஅம்பு வில்லெடுத்தேயொரு போரைத்தொடுப்பவளோ
வாலைப்பருவத்து காதல்துயர்தந்து ஆளைஉருக்குவளோ

காதலி:
சுந்தரனோஒரு இந்திரனோஇவன் சொர்க்கத்தின்காவலனோ
மந்திரமோஇல்லை மாயவனோஉடல் மாளவைக்கும்எமனோ
செந்தணலோஅவன் கண்கள்முன்னேஉடல் தீப்பிடித்தேசுடுதே
வெந்திடுமோஎன் பெண்மைஎரித்தவன் வந்துஅணைத்திடலேல்

அன்னைதனும் எண்ணங்கொள்ளாவிடமது எங்கும்கண்ணைவிடுத்து
என்னஅணிந்தும் ஒன்றில்லாதாய்மனம் ஏங்கிடச்செய்தனனே
அந்திகருகிட ஆதவன்போயொரு வானம்இருளெடுக்க
முந்திஅவன்எண்ணம் நெஞ்சில்வந்தேயொரு முள்ளாய்உறுத்துகுதே

(பொது)
தாமரைபூத்த குளத்தில்குளித்தவள் ஏறிக் கரைவரவே
பூமரம்பின்னே இருந்துதலைவனும் முன்னே தலைப்படுவான்
ஆடைஅரைகுறை யாகவிருந்தவள் தேவியின் கோபமது
ஆண்அவன்மீது திரும்பியதால்அவள் ஆத்திரம்கொண்டுரைத்தாள்

(காதலி)
என்னஎனைஅள்ளி உண்பதுபோலிரு கண்கள்விழித்துநின்றீர்
பெண்ணழகைஒரு கள்ளனைபோல்நின்று காண்பதில்வீரமுண்டோ
முன்னும்பின்னும் எனைப்பார்த்துவிட்டால் மனமோகம்எழுந்திடுமோ
கண்ணிரண்டில்வெறி கொண்டதனால்மட்டும் காதல்வருவதில்லை

காதலன் (மனதுள்)
கண்ணில்மலரும் கனியிதழ்தேனும் கன்னமிருபழமும்
பெண்ணில்இயற்கை படைத்ததென்ன இவள்பேசரும்பொற்குடமே
எண்ணஉடல்துடித் தேனோமயக்குது எனிலும்பேச்சறியாள்
கன்னியவள்தலை கொண்டகனம்தனை கொஞ்சம்குறைத்திடலாம்

(காதலன்)
உன்னைஅழகியென் றெண்ணும்தவறினை செய்யும்இளையவளே!
வண்ணம்குயிலதும் வார்த்தைமயிலதும் கொள்ளும்மடந்தைதனை
எண்ணிமனமது ஏங்குவதொன்றில்லை ஏந்திழையேபுரிவாய்
இந்தஜென்மமதில் எந்தன்மனம்கொள்ள எண்ணின்மறந்திடுவாய்

(காதலி)
அங்கு மட்டுமேது பெண்ணவளின்மனம் கொள்ளும்அழகுள்ளதோ
தொங்கிடவோர்சிறு வால்இருந்தால்குறை இல்லையென் றாகிடுமாம்
மங்கையர்நல்மனம் மந்திகளைகண்டு மையல்கொள்ளுவதுண்டோ
நங்கையர்நெஞ்சம் அணுகிடகூடுமோர் ஆற்றல்உமக்குளதோ

(காதலன்)
ஏதடி கள்ளிநீ கொல்லவென்றோஇந்த மோகவடிவெடுத்தாய்
பாரடிஎன்னை பழித்தஉனதுடல் பற்றிஇழுத்திடுவேன்
தாவிமரம்செல்லும் வானரங்குஒரு தர்மம்அறிவதில்லை
கூவியழுஉந்தன் மேனிகளங்கம்வைத்தெ யான்இங்ககல்வேன்

(இருவரும்)
பொங்கியெழுத்து பக்கம்வரஅவள் அஞ்சிநடைமறுக
அங்கவர்மேனி உரசிடஓர்பொறி நெஞ்சிரண்டும்உணர
பொய்கைஉலவிய பூவுடல்வாசம் பெண்ணில்எழுந்துவர
செய்கைமறந்தவன் வெண்ணிலவின்முகம் கண்டுதனைமறந்தான்

வஞ்சியவளோ கொண்டபெருமூச்சில் நெஞ்செழுந்துதணிய
பஞ்சின்சுமைதனை பாரமிறக்கிட நெஞ்சவன்எண்ணிவிழ
கொஞ்சம்நசிந்திட கொஞ்சம்விலகிட கொஞ்சமுணர்விழக்க
பஞ்சில்நெருப்பென இரண்டுஉடல்களில் பற்றிஎரிந்ததுதீ

கட்டிஇழுத்திட்ட கைகளுக்கேயவள் ஒத்தடமேகொடுத்தாள்
காவலன்பெண்ணின் கனியுடல்கண்டு காலமதைமறந்தான்
உண்ணுவதேது உணர்வதுஏது காணுவதேதறியா
புண்படுமோதொட என்றுபயந்தவள் பூவுடல்காத்துநின்றான்

பாவையவன்நெஞ்சில் தேர்இழுத்தெயிரு ஊர்வலம்போகவைத்தாள்
வீறுகொண்டஇரு தோள்கள்இளகிட தீயிதழ்கொண்டுசுட்டாள்
நூலிடைமீது வைத்தகரங்கள்மேல் மோகவிலங்குஇட்டாள்
காலொடுகாலைப் பின்னிஅவனையோர் காதல்சிறையிலிட்டாள்

பேசும்சுதந்திரம் அற்றவனாய்ஒரு பேதமைகொள்ளவைத்தாள்
மாசுமறுவற்ற வீரனைப்பெண்மையின் காவலன்ஆக்கிவிட்டாள்
ஏதினிஉந்தனுக் கென்றுஒன்றுமில்லை மேனிமுழுதெனக்கே
ஏதிலிநீஎன எள்ளிநகைத்தவள் இன்பத்திலேதிளைத்தாள்

நெஞ்சில் ஒரு முள்

கலைந்தாடுங் கருங்குழலோ கரைவதன மருவ
அலைந்தாடு கடலின்திரை எனவளையு முடலும்
வலையூடு துடிகயலின் வடிவமெடு விழியும்
குலைந்தோடு முகிலினிடை குளிர்மதியி னெழிலும்

சரிந்தாடு தோகைமயில் சரசமிடு நடையும்
எரிந்தாறும் சுடுகதிரின் ஒளிகொள் ளிருவிழியும்
வரிந்தாலும் விளைஉடலின் வளமழியா மதமும்
சொரிந்தாடும் பழமுதிர்ந்த சோலையென நின்றாள்

வளர்ந்தாலும் சிறுவயதின் வாய்மொழியின் குளுமை
குளிர்ந்தாடும் அலைவாவி கொண்டமலர் நளினம்
வெளிர்தா மரை மலரில் வீற்றிருக்கும் தேவி
துளிர் மேனிஅவள்அழகை தோற்று விடச்செய்தாள்

எழுந்தாடும் பருவமதன் இயல்பதனைக் கண்டு
பழுத்தாடும் மாங்கனியை பார்த்த கிளியென்று
எழுத்தோடு அடங்காத எழில்வண்ணம் தன்னை
முழு(த்)தாகஅடைந்து விட மன ஆசை கொண்டேன்

பளிங்கான சிலை எந்தன் பார்வைதனைக் கண்டாள்
செழித்தாடும் சோலைமலர் சேரும் கருவண்டாய்
களித்தாடி அவளருகில் காணவென விழைய
நெளித்தேநல் லிதழ்வழியே நெஞ்சுறையச் சொன்னாள்

அண்ணா நீர்நல்லவரென் றறிவேன்சற்றுதவும்
கண்ணாளன் காதல்மனங் கவர்ந்தவனாம் அங்கே
எண்ணாது நிற்குமவன் என்காதல் அறியான்
பெண்ணாம் இவள் நிலையைப் பேச வழி சொல்லும்

கைநீட்டுதிசையில் அவன் காளைதனைக் கண்டேன்
மெய் தடித்து மேனி உரம் மிடுக்கோடுநின்றான்
பொய்யுரைக்க வில்லை அவன் புறமேனிஅழகே
செய்வதெது அறியாது சேவை எனதென்றேன்

நெஞ்சோடு சிறுவாளை நீட்டி உடல்செருகி
பஞ்சாகி வான்பறக்க பாவிமனம் கொன்று
நஞ்சோடு அமுதூட்டும் நாடகமும் ஆடி
அஞ்சோடு அறிவிழந் தாகஎனை அழித்தாள்

கொள்ளுவளோ? கொல்லுவளோ?

தெண்ணிலவு வானுலவ தேகம்குளிர்கொள்ளும்
கண்மயங்கிக் காதல்கொளக் கன்னியரைத்தேடும்
பண்ணிசையோ காற்றெழுந்து பாடுமொலி கேட்கும்
அண்ணளவாய் இன்பந்தேடும் அந்திவேளை தன்னில்

மஞ்சள் வெயில் மாலைசுகம் மயங்குமந்தவேளை
மஞ்சமதில் சாய்ந்தவனோ மதிமயங்க நின்றேன்
கொஞ்சுமிளங் குருவிகளின் குறுகுறுத்தஓசை
கூடிஅவை மகிழுகின்ற குரல்வெளியே கேட்டேன்

சின்னதொரு கிண்ணமதில் திராட்சை ரசம் கொண்டு
செவ்விழிகள் நீர்வழிய சிற்றிடையாள் முன்னே
கண்கலங்கி நிற்பதனைக் கண்டணைக்கச் சென்றேன்
கரமெடுத்து சென்றவனோ கணம் வியந்து நின்றேன்

வண்ண மலர்க் கண்ணழகுப் பெண்ணவளோ முன்னால்
வாசமெழுக் குளிரெடுத்த பூவெனவே நின்றாள்
எண்ணமதில் சித்திரமோ இல்லை சிலைதானோ
எழில்வடிவம் தீட்டியதோர் இயற்கைமகள்தானோ

பொன்னுதட்டில் பூஅலர்ந்து பொங்குமெழில் வண்ணம்
புதுமெழுகில் வார்த்தமுகம் பஞ்செனவே கன்னம்
தென்னையிலை தென்றலுக்கு தலைஅசைத்து மின்னும்
தன்மையிலே இடையசையத் தாகமுடன் பார்த்தாள்

வஞ்சிமனம் வைத்த துள்ளே என்னவென்று அறியேன்
வாசனைக்கு பூமறந்து வந்த வண்டைக் கண்டேன்
நெஞ்சிலெழும் இச்சைதனை நீலவிழிப் பார்வை
நெளிபுருவ வில் வளைத்து நினைவழிய எய்தாள்

தேரிலேறி திங்களுலா தோன்றும் எழில்வண்ண
திருமகளின் ஒரு உறவு திரும்பியெனைக் காண
போரிலேதும் இல்லையெனப் பிழைத்தவனைப்போல
பேச்சிழந்து மூச்சிரைத்து பேசும்குரல் கேட்டேன்

சின்னவளே இப்படிநீ சிறுவிழிகள் கொண்டு
செந்தணலாய் வாட்டுவது செய்கை பெருந்துன்பம்
புன்னகையில் கொல்லுகிறாய் போதுமடி பெண்ணே
புற்றிலெழும் பாம்பெனவுன் பூவுடலைக் கண்டேன்

கன்னியவள் நேர்திரும்பி கண்களெனைப் பார்த்து
கனிஉதட்டைக் கடித்து ஒரு கள்ளநகை பூத்து
என்னிதயங் கொண்டவரே இன்றுமது வாழ்வு
எல்லைவந்து சேர்ந்ததய்யா கொல்லமனங் கொண்டேன்

அஞ்சி மனம் பதைபதைக்க அவளெழுந்துமுன்னே
ஆடுமொரு பாம்பெனவே அழகில் நஞ்சுகொண்டு
வஞ்சியொரு கையில் சிறு வாளெனவே கத்தி
வைத்தபடி காலெடுத்து வந்து முன்னேநின்றாள்

அத்தனையும் சொத்து பணம் எண்ணி இங்குவந்தேன்
ஆடுவரை ஆடியுனை அன்பு கொள்ளவைத்தேன்
இத்தரையில் எண்ணியதை எப்படியும் செய்வேன்
இறைவனைநீ தொழுது மன இறுதிஎண்ணி நில்லும்

புன்னகைத்த பொன்னிலவோ பேரிடியாய் நின்றாள்
பூவிழிகள் மின்னியொரு புயலெனவே கண்டேன்
இந்தவேளை பார்த்ததிலே ”தொடரும்’என்றுபோட
எழுந்து தொலைக்காட்சி தனை எரிச்சலுடன் அணைத்தேன்

அவள் நிலவானாள்! நான் முகிலானேன்!

பொன்னென்று எண்ணினேன் பூவென்று பாடினேன்
புரியாத ஒருவேளையில்
கண்ணேஎன் றேங்கினேன் கனியேஎன் றோடினேன்
காணாத ஒருவேளையில்
பொன்னல்லப் பூவல்லப் பூவையோர் கனியல்லப்
புதியதோர் பொருளுணர்ந்தேன்
கண்ணல்லக் கனியல்லக் காலை வெண் பனியல்லக்
காதலில்வேறுகண்டேன்

பொன்னல்லப் பொற்குவை புதையலென் றேகண்டு
பூரித்து நின்றாடினேன்
என்னவென்பேன் பூக்கள் இலங்குமோர் பூந்தோட்டம்
இவளென்று கண்டு கொண்டேன்
கண்ணெனும் வண்டாடும் கனிமலர்த் தோட்டமாம்
கைதொட்ட நாளுணர்ந்தேன்
கன்னமிட் டிவளிடம் கைபற்ற ஆயிரம்
குவை உண்டு என்றறிந்தேன்

சந்தணம் நாறிடும் சரிகுழல் மேனியிற்
சங்கீத வீணை கொண்டாள்
பொன்மேனி தொட்டிடப் புயல்தொடும்  பூவெனப்
பொல்லாத ராகமிட்டாள்
பின்னலில் பூவினை சூடுவள் மேனியில்
பெருந்தொகை மலர்விரித்தாள்l
என்னவென் றென்னையும் எண்ணவைத்தே கணக்
கில்லையென் றேங்க வைத்தாள்

தன்காதல் சொல்லுவள் என்றெண்ண மௌனமே
தந்தெனை ஏமாற்றினாள்
எந்நாணமின்றியே இரவிலே மதுவாகி
என்மீது தீயை வைத்தாள்
மன்மதன் விட்டிடும் மலரம்பு பட்டதும்
மாறாத காயம் கொண்டாள்
என்காதல்ஒத்தடம் இல்லையென்றால் உயிர்
இல்லையென்  றேங்கி நின்றாள்

வெண்ணிலா வானிலே விளையாடி ஓடியே
விரைந்திடும் முகில் கலந்தால்
எண்ணமெங்கும் இவள் ஏதோநினைத்தென்னை
இதழ்மூடிப் புன்ன கைப்பாள்
விண்ணிலே தாரகை கண்சிமிட்டும் ஒரு
வேளையில் நல்லிருட்டில்
வெண்மதி நான் ஓடிவிளையாட நீமுகில்
வாவென வெட்க முற்றாள்

கன்னமிட்ட கன்னி

செழுமலர் நிறைபொழில் சிதறிய திவலைகள்
சொரிவது எனவிழி நீர்வழிய
மெழுகெனும் குளிர்சுனை மலரது இதழ்களும்
எழுமெழில் முகமதில் தீ பரவ
தழுவிடு எனையென பருவமும் அவனிடம்
கொலை கொலையென மனம்தான் அழிக்க
எழுமிலை மறைகனி இதிலுறை பனிவிழும்
எழிலுறும் வகையென இவளிருந்தாள்

சொலுவென்ன குறையது சிறுவய துடையொரு
சிலையெனும் வடிவெடு ஆரணங்கே
கொலுவினி லிருஉரு உயிர்வர அருகினில்
குறுநடை பழகிட வருமெனவே
பொலபொலஎன உதிர் புதுவகை மலரெனும்
பொலிவொடு இதழ்வழி மதுமினுங்க
குலுங்கிடு மிவையென்ன கொடுமைகள் தருதென
குடமிரு வளை யயல் கோபமிட்டான்

அலைகடல் பெரியது அதைவிட இதுபெரும்
அதிசய மலையுது நீரின்றியே
மலையிடைஎழுமதி முகில்வரு மிடையினில்
மகிழ்வென நீந்திடும் மதிகுலைய
உலையிடு உயிரென ஊறிடும் நீர்விழு
உளதுயர் தெளிவெடு மீனசைய
விலையில திவளெழில் சிதைவது கொடிதென
விளைவது ஏதென இவன் வினவ

இழிவெரு துடனெடு எறிகயிறுளனென
திருபொருள் `திருவுடன்` அதிலொருகால்
அழி`வு`செய் இனமிவன் எதுஎன துயிர்துடி
ஒலியிடும் பொருள்கொள விழி பொழிந்தேன்
ஒழிவில தொருமுறை உயரிய பதில்தர
உளதொரு பெரியவர் உமையடைந்தேன்
வழியறி அறிவது வரவில்லை எதுவரை
வாழ்வென மீளவும் வழியுரையும்

எவனுன துடைமையை இருவிழி நீருற
எதிரியென் றில்லமும் கன்னமிட்டோன்
அவனது தருவனோ அதைவிட அவனது
எடுபொருள் கவரென இவனுரைத்தான்
நவமணி பொலிந்திடு ஒளியுடை சிலையென
இவளெழில் வதனமும் பூமலர
அவனிலை இவனென எடுஉன திதயமும்
எங்குள தெனஇதழ் களவுசெய்தாள்!

*****************
3வது பந்தி
அலைகடல் பெரியது.......இதில்

  நீரில்லாமலேயே அலைகிறதே இவளுடலில்என்று அலையை க்காணும் அதிசயமென கூறி மீன்கள் இரண்டு  அந்தஅலையில்  தாங்களும் நீந்தவேண்டுமே என்ற புத்தி கெட்டு (மதி விட்டு)
அவள்முகத்தில் வந்திருந்தன.
வந்தபின்தான்  தம்த்வரை உணர்ந்துகொதி நீரிலிட்டதாக துடிப்பதால் (கண் இமைப்பது)  கண்களில் நீர்வழிய அழகு கெடுகிறதே

4வது
1. இழிவு எருதுடன் எடுஎறி கயிறுளன்
எனதிரு பொருள்

2.  `திருவுடன்` அதில் `வு` அழிசெய் =  திருடன்

3. உயிர்துடி ஒலியிடும் பொருள் = இதயம் (இருதயம்)


5வது

எங்குள தெனஇதழ் களவுசெய்தாள்!(கன்னமிட்டாள்)


என் காதலுக்கு எதிரிகள்!

குன்றும் கொடிதிரளும் குலவுமலர்க் கூட்டமதும்
என்றும் புனல்பகைத்த இருகயலும் தன்னகத்தே
நின்றும் கனிபழுத்து நெகிழா இளமுறுக்கும்
வென்றும் எனைஇழியும் விளைமேனி, பருவமதும்

கொண்டே யிவள்குனிந்து கோலமிடக் கையசைவில்
வண்டோர் மலர்காந்தள் வாடிவிழு தோவென்று
உண்டெழும் போதைகொண் டோடிமலர்க் கரந்தாவ
கண்டே நகைகொண்டேன் அவள்கதறி யெழுந்தோட!

தேரென் றசைந்தாடும் தென்றலின் நடையழகும்
கூரென் குறுவாளும் குத்துமிரு தோள்வலிமை
சேரும் இருகன்னச் செழுமையில் சினமெடுத்து
சாரும் இலைமறைவில் சிவந்துகனிந் தன மா!

போகும் இவள்பின்னால் போயன்னம் நடைபயிலும்
தோகை நடம் திருத்த துள்ளல்மான் கற்கவரும்
நாகம் இடைஅசைவின் நெளிவழகை பழக, இடி
மேகம் தனைமறந்து மின்னல் புவிசென்ற தென்னும்

வாழை நடந்ததென வானரங்கு கனிதேடும்
தோளைப் படர்ந்த முகில் தூவுமெனப் பயிரேங்கும்
காளை இளந்திமிரைக் கண்டே முகந்திருப்பும்
நாளை இவையெல்லாம் நான்கொள்ளப் பகையாகும்!