Pages

Monday 27 February 2012

மலரோ? மகளோ?



இதழ்பூத்து மதுஊற்றி வழிகின்றது- அது
எதையூற்றி இதயத்தைப் பிழிகின்றது
மகிழ்வேற்றி மனதோடு இழைகின்றது - அது
மலர்வாகி இசைராகம் பொழிகின்றது
அகிலேற்றிக் கரம்தீப ஒளிகூட்டுது - அந்த
அனலேற்று மொளிபொன்னில் எழில்காட்டுது
நுதலோடு விரிவானக் குழலென்பது - அதில்
நிதம் மாறும் நிலவொன்று ஒளிர்கின்றது

அலைகண்டு நடைதந்து வளமாக்குது - அதில்
அலைகின்ற நினைவெங்கோ தொலைகின்றது
மலையோடு மழைகூடி நதியாகுது - அது
மடிகொண்ட பிரவாகம் மனங் காணுது
தலைமேவி நீரோடில் பெருவெள்ளமே - இத்
தவிப்போடு நிதம்காணும்  இளநெஞ்சமே
கலையின்ப இசையார்க்கும் எழில்வீணையோ - அதை
காணதவிழி கூறும் அதுதான் இதோ!

கனிதூங்கு மதைக் காத்துக் கிளிஏங்குமோ - அது
கதைபேசும் வகைபோலும் குரல்நாதமோ
பனிதூங்கும் புல்போர்த்த பசும் மேடையோ - அதில்
பகல் காணும் ஒளிக்கீற்றின் பிரகாசமோ
தனியாக எவர்கொண்டு உருவாக்கினார் அதைத்
தரநூறு வகை வண்ண மெருகேற்றினார்
இனிதேவர் உலகத்தில் இடம்மிஞ்சுமாம் - ஏன்
இவள்வீட்டின் முன்னாலிந் திரலோகமாம்

Monday 6 February 2012

காதல் மயக்கம் 1

1. மாலையின் மயக்கம்

வானமெனும் மகள்மேக இதழ்தனை
வண்ணம் சிவப்பினில் சாயமிட
தேனுமினிய பொன்மாலை யிளங்காற்று
தேடி அலைந்தென்னை தீண்டவர
ஞானம் அறியும் நற்கோவில்களில் மணி
யோசை எழுந்து பரவிவர
போனதிசையினில் கால்பதித்தே யந்தப்
பூமிதனிலே நடந்து சென்றேன்

வானரக்குஞ்சுகள் வாழைமரம் முறித்
தோடின வாயில் பழம்திணித்து
சேனை வயல்கதிர் நெல்முறித்துகொண்டு
சேர்த்தன பச்சைகிளி பறந்து
கூனை எடுத்தகதிர் வளைந்து நிலம்
கொஞ்சின மண்ணை வளர்த்ததுக்கு
கானமிடும் பலகானக் குருவிகள்
காற்றில் பறந்தன சத்தமிட்டு

வீசி அடித்தது காற்று மரத்தினி
லோடிக் குதித்தது சின்ன அணில்
பாசிபிடித்த வயல் குளத்தில் நின்று
பாவம் தவித்தன தாமரைகள்
பேசிச் சிரித்திடும் பெண்குலத்தோர் கரை
மீதிருந்தி அள்ளிநீர் தெளித்து
கூசி சிரித்திட்ட கோலம் கண்டேநடை
கொண்டனன் எந்தனோர் பாதைகண்டு

நானும் நடந்தொரு தூரம்சிறிதிடை
நாடும் பொழுதினில் கண்ணெதிரே
கூனும் விழுந்து நரைதிரண்டு தடி
கொண்டொரு மாது அருகில்வந்தாள்
வானும் நடந்தமுகிலெனவே பஞ்சை
வார்த்தன வெண்ணிற கூந்தல்முடி
மீனும் நடமிடும் ஆழிதிரையென
மேனி சுருங்கித் திரைந்திருக்க

கண்ணினொளி சிறுத் தாகிவிட ஒரு
கையை எடுத்துஇமை பொருத்தி
அண்மையில் வாஎன கையசைத்து ஒரு
ஆணையிட்டால் அந்தமூதாட்டியார்
எண்ணியென்னவென நான்நினைத்தே அயல்
ஏகமுதல் கணீரென்ற ஒலி
தண்ணிலவின் தங்கை சின்னவளாய் மணி
தாளமிடஒரு தோகை நின்றாள்

எங்கு சென்றாயடி சின்னவளே என்று
ஏதோ நினைத்து முணுமுணுக்க
தங்கமகள் அவர் ரண்டு உருவமும்
தன்மைகண்டு நானும் எண்ணிநின்றேன்
பொங்கி வள ரிளம் பூரிப்புடன் எழில்
புத்தம்புது மலர் போலிருந்தாள்
சங்கு எனும் வெளிர் மின்னும் முகமதில்
சந்திரவண்ணக் குளுமை கண்டேன்

பிஞ்சென நின்றவள் நாளைவளர்ந்திடப்
பின்னல் கலைத்தொரு கொண்டையிட்டு
வஞ்சியென் றாகவளர்ந் தொருக்கால் நல்ல
வாழ்வின் சுவைகண்டு தான்மகிழ்ந்து
நெஞ்சமுவந்து கதைபடித்துப் பல
நீளவிழிசிந்தும் நீர்துடைத்து
வெஞ்சினம் கொண்டும் வியந்து பலபல
வேடிக்கையால் மனம் புன்னகைத்து

இந்த உலகினில் வாழ்ந்து முதிர்ந்துகோல்
கொண்ட முதியவள் போல் குனிந்து
விந்தை வளைந்து நடந்திடுவாள் இது
வேடிக்கையானொரு வாழ்க்கையன்றோ?
சந்தடி என்னை உலுப்பிவிட நானும்
சற்று நிமிர்ந்தயல் பார்த்திடவே
சிந்து நடைமகள் புன்னகைத்தே யெனைச்
சற்று நாணமிடச்செய்து சொன்னாள்

கண்களிரண்டதும் துள்ளும்கயலெனில்
காணுமுகமதி பொய்த்துவிடும்
வெண்ணிலவானது வட்டமுகமெனில்
வண்ணஇதழ் கொவ்வை பொய்த்துவிடும்
எண்ணீயிவைஇதழ் கொவ்வைஎனில் அங்கு
எப்படி உள்ளிடை முத்துக்களோ
அண்ணளவாய் இவைஒன்றுமில்லை அந்த
இந்திரலோகத்து பொற்சிலையோ

பொன்னும் பளிங்கதும் போதாநவமணி
கொண்டு செதுக்கிய சிற்பமதோ
என்னும் பிரமனும் இத்தனைநாளில்லா
அற்புதம் செய்ய விளைந்தனனோ
மின்னும் அழகுடன் என்னயல் நின்றவள்
மூத்தவள் தன்னை விழிசரித்து
”என்னுடை அன்னையைப் பெற்றவளாமிவள்
இன்று தனதில்லம் மீளுகிறாள்

அன்னவளால் இனி ஆகமுடியலை
ஆடி நடைதளர் வாகுகிறாள்
இன்னுமடைந்திட நீண்ட தொலையுண்டு
எப்படிசெல்வது நானறியேன்
தன்னந்தனிதுணை வந்துவிட்டேன் ஏதும்
தக்க உதவிகள் செய்குவீரோ
என்னசெய்வேன்” என்று இரண்டுமலர்க்கரம்
ஏந்தும்விரல்கள் பிசைந்து நின்றாள்
(தொடரும்....)

காதல் மயக்கம் 2




2. இளமை மயக்கம்

கண்களிரண்டதும் துள்ளும்கயலெனில்
காணுமுகமதி பொய்த்துவிடும்
வெண்ணிலவே இந்த வட்டமுகமெனில்
வண்ணஇதழ் கொவ்வை வந்ததுபொய்
எண்ணீயிவள்இதழ் கொவ்வைஎனில் அங்கு
எப்படி உள்ளிடை முத்துக்களோ
அண்ணளவாய் இவைஒன்றுமில்லை அந்த
இந்திரலோகத்து பொற்சிலையோ

பொன்னும் பளிங்கதும் போதாநவமணி
கொண்டு செதுக்கிய சிற்பமதோ
இன்னும் பிரமனும் இத்தனைநாளில்லா
அற்புதம் செய்ய விளைந்தனனோ
மின்னும் அழகுடன் என்னயல் நின்றவள்
மூத்தவள் தன்னை விழிசரித்து
”என்னுடை அன்னையைப் பெற்றவளாமிவள்
இன்று தனதில்லம் மீளுகிறாள்

அன்னையவள் இனி ஒரடிகூட
எடுத்துநடந்திடும் ஆற்றல் கெட்டாள்
இன்னுமடைந்திட நீண்ட தொலையுண்டு
எப்படி என்று மயங்குகிறேன்
தன்னந்தனிதுணை வந்துவிட்டேன் ஏதும்
தக்க உதவிகள் செய்குவீரோ”
கன்னம் விழிமழை கண்டிடுமோ என்னும்
வண்ணம் விரல்கள் பிசைந்து நின்றாள்

கிண்ணமதில் விரல் சுண்டியதால் வரும்
கிண்ணெனும் நாதக் குரலெடுத்து
மண்ணிற் பெரும்வீர மாமறமும்வந்து
மண்டியிடவைக்கும் பேரழகில்
எண்ணிக் கணக்கிடா ஆண்டவனும் அள்ளி
இட்டபொலிவுடன் நின்றவளோ
வண்ணமுகத்தினில் சோகமுறச் சொன்ன
வார்த்தைகண்டு மனமாவலுற்றேன்

சற்று தொலைவினில் சுந்தரத்தின் பையன்
சுற்றிவளைந்தொரு மாட்டுவண்டி
விற்றுவிட பெரும்சந்தையிலே பழம்
வைத்தொரு கூடை இறக்கிவிட்டு
நிற்பதைக் கண்டு மனம்மகிழ்ந்து - அந்த
நீலவிண்ணின் மதிதங்கையினை
உற்ற வழிஒன்று தோன்றியதேயென
ஓர்பயமில்லையென் றாற்றுவித்தேன்

முன்னம் இருந்தவன் சின்னவயதினன்
மெல்ல அணுகிநான் சேதி சொல்ல
அன்னமெனும் எழில்மங்கை தனைகண்டு
ஆவல் மீறத் தலையாட்டி வைத்தான்
அன்னை தனும் அவள் ஆக இருவரும்
அந்தியிருள் மூடும் வேளையிலே
இன்பமுடன் சென்று வாருமென்றேன் இந்த
ஏழை பெரிதும் உவகை கொண்டேன்

கண்ணை விழித்தனள்அச்சம்கொண்டு அந்த
கட்டழகன்தனைச் சுட்டியொரு
எண்ணமதில் பயம்கொண்டேன் அவனிங்கு
என்னை விழிப்பது ஏற்றதன்று
உண்ணுமதுவென கண்களினால் ஏதோ
உள்ளேநினைந்தவன் புன்னகைத்தான்
அண்ணா நீங்கள் கூடவந்திடுவீரென
ஆவலுற முகம் பார்த்துநின்றாள்

கூடிப்பயணமும் செய்வதென அவள்
கேட்கமனம்  கொண்டு சம்மத்தித்தேன்
ஆடிச் சிறுவழி ஒடி நடந்திடும்
ஆனந்த வண்டியில் நாம் புகுந்தோம்
தேடித்திசைதனில் போகும்வண்டிதனின்
துள்ளுமெழில் அலைபோலசைய
பாடிக்களித்திட எண்ணியவனொரு
பாட்டிசைத்தான் முன்னேபாதைகண்டோன்

(அவன் பாடுகிறான்)
ஆத்தினிலேவெள்ளம் வந்து அலையடிக்குது
அதிலிரண்டு கயல்புரண்டு துடிதுடிக்குது
சேத்தினிலே பூமலர்ந்து சிரித்துநிற்குது
செங்கனியின் வண்ணமுடன் செழுமைகாணுது
நேத்துவந்த மாமனுக்கு நெஞ்சு குளிருது
நிலவுவந்து நேரில் நின்று ஒளியைவீசுது
சாத்திரங்கள் பாத்துபாத்து சரியென்றானது
சாமிகூட பூவிழுத்தி சம்மதிக்குது

வாத்தியாரு பெத்தபொண்ணு சட்டம்பேசுது
வந்துநில்லு பக்க மென்றால் வாதம்பண்ணுது
கூத்தடிச்சுச் சின்னதோட கூடியாடுது
குழந்தையாக அழுதுகொஞ்சம் கோவம் கொள்ளுது
பாத்துப் பாத்து எத்தனைநாள் காவல் காப்பது
பழமிருக்கு பக்கத்திலே பொழுது மாளுது
காத்தடிக்கும் வேளையிலே தூற்றத்தோணுது
காட்டுமலர் தோற்றத்திலே கண்ணைஇழுக்குது

முன்னிரவு குளிரடிச்சு மேனி நடுங்குது
மூச்சினிலேபூவின் வாசம் மோகம்கூட்டுது
பின்னிலவு தூக்கம்விட்டு என்னைஎழுப்புது
பேசவென்று எவருமில்லை பாவம் விதியிது
கன்னி யவள் நெஞ்சம் காணும் காதலானது
காணும் பச்சை இலைமறைத்த காயென்றானது
சின்னப்பொண்ணு கண்ணசைவில் என்னசொல்லுது
சேர்ந்திடலாம் என்பதனை தின்று விழுங்குது

******************

பாடியவன் கடைக் கண்ணெடுத்துஅவள்
பாவைதனை இடை நோக்குவதும்
ஓடிய மாட்டினை ஓங்கிவிரட்டியே
ஒன்றுஇல்லையென காட்டுவதும்
தேடியே காதலை திங்கள் முகவிழி
தேன் மலராளிடம் காத்துநிற்க
ஆடிய வண்டியின் ஆட்டத்திலேஅவள்
அல்லியென நடமாடிநின்றாள்

மெல்ல அவள்மனம் மாறியதோ இந்தப்
மாயமனம் தன்னை நான் அறியேன்
கல்லும் கரைத்திடும் கட்டழகைகொண்ட
காளை அவன் விழிமோதிடவே
வல்லமன தனல்நெய்யெனவே விட்டு
வாசமெழ வழிந்தோடக் கண்டேன்
நல்லதுவோ இல்லை அல்லதுவோஅதை
நானோ புரிந்துகொள்ளாது நின்றேன்.

மேலைத் திசையினில் மேகம்கறுத்திட
மாலைக் கிழவனும் ஆடிவந்து
வாலைக்குமரி யென்றாடும் சுழல்புவி
வண்ணமகளிடம் மாயமிட்டு
ஓலைபிரித்தொரு மந்திரம்சொல்லிட
ஓடிக் கருத்தது விண்ணரங்கு
ஆலைமுடிந்தொரு சங்குகள் கூவிட
ஆடிப்பறந்தன வான்குருவி

தென்றலணைந்தங்கு வீசியதுஅது
தேகம் வருடியேஓடியது
நின்றமரங்களின் மீதுஅதுபட
நெஞ்சை நிமிர்த்திச் சிரித்தன காண்
குன்றதன் பின்னே குடியிருந்த மதி
கோலமிட்டு முகம் பொன்குழைத்து
நன்றெனப்பூசி நளினமிட்டே விண்ணில்
நானிலம் காண நடைநடந்தாள்

உள்ளம் மயங்கிடும் வேளையது மேனி
உணர்வு வென்றிடும் நேரமது
கள்ளைஉணவென்று உண்டதென இரு
கண்ணும் மயங்கிடும் மாலையது
தெள்ளெனும் நீரினில் கல்விழுதலெனக்
கன்னியின் உள்ளம் கலங்கியதோ
மெள்ள அவனதைக் கண்டுகொள்ள அந்த
மேடையில் நாடகம் கண்டுநின்றேன்

(தொடரும்)