Pages

Wednesday, 10 October 2012

காத்திரு பெண்ணே!


வெயில் வெறுத்தே உலகைவிட்டு
வீழுதடி மனசுதொட்டு
வயல் கரையில் ஆடிஉலா வந்தவளே - உன்
வடிவெடுத்து வானம் செம்மை கண்டதல்லோ

முயல்பிடித்தேன் மூணுகாலு
நெல்விதைத்தேன் சோழமாச்சு
இவள் மயக்க கதையளந்த மன்னவரே - உள்ளம்
எதைநினைத்து கலங்குகிறாள் இன்றவளே

கண்ணிலிட்ட மைகறுப்பு
காணுங் குரல் தளதளப்பு
என்னவட்டம் போடுகிறாய் சின்னவளே- உன்
இளமை என்னை கொல்லுதடி பொன்னவளே

மண்ணை ஆழஉழுதுவைத்து
மாடுரண்டை விரட்டிகிட்டு
கண்ணை மேல வைக்கிறீரே சின்னவரே - இது
கண்ணியமோ கூறுமய்யா பொன்னவரே?

சலசலத்து ஓடும்நதி
சற்று நடை தவறுமடி
சிலுசிலுத்த புல்வரம்பில் சித்திரமே - நீ
சிரித்து விட்டால் மாமன் கெட்டான் இக்கணமே

கலகலப்பு பேச்சிலிட்டு
கன்னிமனம் கலங்கவிட்டு
நிலவு நேரம் கைபிடிக்கும் நல்லவரே- உங்க
நினைவி லிங்கு காயும் நிலா வெந்ததுள்ளே

கலயமொன்று இடுப்பில் வைத்துக்
கைவடிக்கா சிலைநடந்து
வலை விரித்தே எனைப்பிடித்தாய் வல்லவளே- இந்த
வானத்துக்கும் மழை இருக்கு ஈரமுள்ளே

உலையிலிட்ட சோற்றினிலே
ஒருபருக்கை பதமெடுத்து
நிலையறிந்து வடிச்சிடலாம் மன்னவரே - உங்க
நினைவி லேது படிக்கணும் நான் இன்னுமல்லோ?

சலசலத்துக் காளை பூட்டி
சாலையிலே ஓடும்வண்டி
கலகலக்கும் உன் சலங்கை சத்தமடி - என்
காலமெல்லாம் உன்முகந்தான் மிச்சமடி

நெல்முதிரும் கதிர் வளையும்
நேரம்வரும் அறுவடைக்கும்
நல்லவரே வளைந்து நின்றேன் பாரய்யா - எந்த
நாளில் எனைக் கைபிடிபாய் கூறய்யா

வயல் விதைத்து வளரவிட்டு
வளம் கொழிக்க அறுத்தெடுத்து
வசதியுடன் மாமன் நிற்பான் தையிலே - அப்போ
வாழ்வில் உனைக் கலந்திடுவேன் பொய்யில்லே

புயல் அடிக்கும் மழையும்கொட்டும்
புகுந்த வெள்ளம் குடியழிக்கும்
அயல் முழுக்க கிசுகிசுக்கும் நல்லவரே -- உயிர்
அதுவரைக்கும், துடித்திருக்கும் என்னவரே!

Monday, 1 October 2012

என்ன மாயமோ

கண்ணெதிரில் குதித்தோடும் நதியெனக்
  காணும் மகிழ்வு கொண்டாள் - உயர்
வெண்முகிலும் கொண்ட வானநிலவென
  வண்ணம் மறைந்து கொண்டாள் 
திண்ணமிதே அந்த தென்றலென விழி
  தன்னில் குளுமை கொண்டாள் - ஏதும்
பண்ணாமலே உயிர் வேதனை ஆக்கிப்பின்
   பாதியென் றாகிவிட்டாள் 
    
கண்களினைக் கயலென்று சொன்னார் அவை
  காணுமோ என்றிகழ்ந்தேன் - இது
பெண்மயிலோ எனப் பேச்சுரைத்தார் இவள்
  பேதமை யில் நகைத்தேன்
எண்ணமின்றி அயல் சென்றவனை அட
  எப்படி மாற்றினளோ - இரு
கண்ணசைவில் என்னை கொள்ளையிடும் வகை
  கண்டு திகைத்துநின்றேன்

பொன்னெனு மோரெழில் மாலை கண்டேன் சுடர்
  போகமயங்கி நின்றேன் - பசுந்
தென்னோலையில் நடஞ்செய்யுந் தென்றல்தொட
  தேகம்சிலிர்க்க நின்றேன்
என்னானதோ இவள் பார்வைபட இவை
  அத்தனையும் மறந்தேன் - என்ன
சொன்னால் நடந்திடும் மாயமென அவள்
  சுட்டும் வழிநடந்தேன்
 
தண்டாடும் பொய்கையின் தாமரையின் எழில்
  தன்னை இரசித்திருந்தேன் -அதில்
கொண்டாடிக் கும்மாளம் போடும் அலையிடை
  கூடிக் களித்திருந்தேன்
திண்டாடிக் காயம் எடுத்த மனதினில்
  தென்பினை ஊட்டவென - நிற்கக்
கண்டோடி என்னில் கலந்தவளோ இது
  காண்சுகம் அல்லவென்றாள்

சொண்டோடிச் செவ்வண்ண மானகிளி சொல்லும்
  செல்ல மொழியுடையாள் - கடல்
நண்டோடி ஊரும் நடை பயில்வாள் இந்த
  நானிலத்தில் எழிலாள்
தொண்டாகித் தூய மனமெடுத்தாள் எனைத்
  தோழமை கொள்ள வைத்தே - ஒரு
செண்டாகிப் பூவாய் தினம் மலர்வாள் எனைச்
   சித்தம் பிழற வைத்தாள்

Monday, 24 September 2012

வா என் செல்லம்!

கண்கள் என்னும் மின்னல்பட்டு காதல்வந்ததோ இல்லை
பெண்கள் கூந்தல் முல்லைமொட்டு வாசம் கொல்லுதோ
உண்ண எங்கும் தேனின் சொட்டு ஊற்று கின்றதோ - மலர்
உன்னத்தொட்டுக் கொள்ளுஎன்று என்னை தூண்டுதோ

சின்னசிட்டு வானம்தொட்டுத் துரப் போகுதே - ஆசை
என்னைத் தட்டி ஏக்கம் கொள்ள இன்ப மாகுதே
உன்னைத் தொட்டுகொள்ள நீயும் ஓடிச்செல்வதேன் -அந்தக்
கன்னம் தொட்டுக் கொள்ள வாழ்வில்காலம் உள்ளதோ

கொட்டுவானம் பூமி வந்து வீழும் வெள்ளமே உனை
கட்டிக் கையுள் காணும்போது இன்பம் கொள்ளுதே
வட்டக் கண்ணில் பார்வையென்ன வெட்டும் மின்னலே -அதில்
தட்டத் தட்டச் சத்தபோடும் எந்தன் நெஞ்சமே

அச்சமின்றி பக்கம்வாடி அன்புதெய்வம்நீ -உந்தன்
மச்சக் கண்ணில் என்னைப் போட்டு வைச்சதென்ன தீ
உச்சிவானின் வெண்ணிலாவின் தங்கையாமோ நீ - மனம்
இச்சைகொண்டு காயும் தாகம், கொல்லுதேமே னி

பச்சைமேனி மஞ்சள் பூசி பார்வை கொள்ளவே - நீயும்
வைச்சகண்ணும் என்னைக் கொல்ல வாழ்வதெப்படி?
கச்சை மார்பில் வெப்பமூச்சு சுட்ட துன்பமே அதை
இச்சை கொண்டு நானணைக்க பக்கம் நில்லடி

கொண்டை மாலை சூட்டிஉன்னைக் கோலமாகவே - நானும்
செண்டுப்பூவை கொள்வதாக செல்லமாகவே
வண்டுபோல வந்துநின்று வாழ்வுகாணலாம் ஊரும்
ரண்டுபேரும் நல்லஜோடி என்றுவாழ்த்தணும்

Thursday, 30 August 2012

காதலர் சங்கமம்

கனிமலர் பூத்திடும் இளமலர்ச் சோலையில்
காதலி தேடியே அவன் நடந்தான்
இனிமன தானவள் எழில்பொழில் நீரொடு
இழைந்திட மலராய் நனைந் திருந்தாள்
தனிமையில் வேகிட தலைமுதல் கால்வரை
தகித்திடத் தீய்ந்திடும் மேனியினள்
நனிகுளிர்த் தாமரை நடமிடும் கோலமென்
றலைதனில் ஆடியே குளிரநின்றாள்

இளையவன் பார்த்திரு விழிகளும்கூசிட
எரியழல் பூத்தொரு தாமரையாய்
விளையுறும் மோகமும் விழிகளில் தாகமும்
வினைகொளுந் துயரெழ மனமிழந்தான்
துளையிடு மூங்கிலில் புகுவிரை காற்றினில்
தோன்றிடும் இசையென மீட்டிடவே
வளைபுகு நண்டென விரல்களும் ஓடியே
விந்தைகள் கண்டிட வேண்டிநின்றான்

தணிகனல் பொழிலலை தடவிய தென்றலும்
தரையினில் மலர்களின் மணம் விடுத்து
அணியெழில் குறுநகை எழுமிதழ் உடல்மணம்
இனிதென கண்டதைக் கொண்டதுவே
மணியிடை காணுமோர் நெளிவினை தானலை
மனதினில் கொண்டதைப் போல்நெளிய
அணிகுழல் தானலை விரிந்திட மீன்களும்
அது ஒருவலையென அஞ்சினவே

கரைதனில் காவலன் கனிஉண வினைகொள
காத்திட இவளோ கரைநினைந்து
விரைந்திடநீர்வழிந் தலைதனில் வீழ்ந்திட
வேகுடல் நீர்சுட ஓடினமீன்
நுரையெழுமதுவினை நிறையிதழ் மேற்கினில்
கடல்விழு சுடுபழம்போல்சிவந்தே
நரைகரு முகிலினை நிகரிரு குழல்முடி
நடுநுத லசைவதில் அழகடைந்தாள்

புனையணி உடைதனை மதன்விடுகணைபட
பெருகிடும் தீயதைப் பொசுக்கிடுமே
எனமன மஞ்சிய சிறியவள் நிலைதனில்
அணிவதோ விடுவதோ எனமயங்க
கனமொடு வளர்கனி நிலவெழப் பாலொளி
கவிந்தொரு தோட்டமென் றிருள்மறைய
தினவெடு தோளினன் இரவினில் யாசகன்
தேர்ந்திடு பசியொடு குணமழிந்தான்

பண்ணொடு இசைதரும் பளிங்கெனும் சிலைமகள்
பக்க மணைந்ததும் நுனிவிரலால்
விண்ணிடி மழையுடன் வருமொரு மின்னலை
விரல்தொடும் நினைவுடன் மெலவணைத்தான்
செண்டென பூவனம் செறிமலர் தேனுண்ணும்
வண்டெனநானென விதியமைத்து
தண்டினை காம்பினைத் தளிர்மலர்பூவினைக்
கொண்டவள் நீயென தேன் அளைந்தான்
கனிமலர் பூத்திடும் இளமலர்ச் சோலையில்
காதலி தேடியே அவன் நடந்தான்
இனிமன தானவள் எழில்பொழில் நீரொடு
இழைந்திட மலராய் நனைந் திருந்தாள்
தனிமையில் வேகிட தலைமுதல் கால்வரை
தகித்திடத் தீய்ந்திடும் மேனியினள்
நனிகுளிர்த் தாமரை நடமிடும் கோலமென்
றலைதனில் ஆடியே குளிரநின்றாள்

இளையவன் பார்த்திரு விழிகளும்கூசிட
எரியழல் பூத்தொரு தாமரையாய்
விளையுறும் மோகமும் விழிகளில் தாகமும்
வினைகொளுந் துயரெழ மனமிழந்தான்
துளையிடு மூங்கிலில் புகுவிரை காற்றினில்
தோன்றிடும் இசையென மீட்டிடவே
வளைபுகு நண்டென விரல்களும் ஓடியே
விந்தைகள் கண்டிட வேண்டிநின்றான்

தணிகனல் பொழிலலை தடவிய தென்றலும்
தரையினில் மலர்களின் மணம் விடுத்து
அணியெழில் குறுநகை எழுமிதழ் உடல்மணம்
இனிதென கண்டதைக் கொண்டதுவே
மணியிடை காணுமோர் நெளிவினை தானலை
மனதினில் கொண்டதைப் போல்நெளிய
அணிகுழல் தானலை விரிந்திட மீன்களும்
அது ஒருவலையென அஞ்சினவே

கரைதனில் காவலன் கனிஉண வினைகொள
காத்திட இவளோ கரைநினைந்து
விரைந்திடநீர்வழிந் தலைதனில் வீழ்ந்திட
வேகுடல் நீர்சுட ஓடினமீன்
நுரையெழுமதுவினை நிறையிதழ் மேற்கினில்
கடல்விழு சுடுபழம்போல்சிவந்தே
நரைகரு முகிலினை நிகரிரு குழல்முடி
நடுநுத லசைவதில் அழகடைந்தாள்

புனையணி உடைதனை மதன்விடுகணைபட
பெருகிடும் தீயதைப் பொசுக்கிடுமே
எனமன மஞ்சிய சிறியவள் நிலைதனில்
அணிவதோ விடுவதோ எனமயங்க
கனமொடு வளர்கனி நிலவெழப் பாலொளி
கவிந்தொரு தோட்டமென் றிருள்மறைய
தினவெடு தோளினன் இரவினில் யாசகன்
தேர்ந்திடு பசியொடு குணமழிந்தான்

பண்ணொடு இசைதரும் பளிங்கெனும் சிலைமகள்
பக்க மணைந்ததும் நுனிவிரலால்
விண்ணிடி மழையுடன் வருமொரு மின்னலை
விரல்தொடும் நினைவுடன் மெலவணைத்தான்
செண்டென பூவனம் செறிமலர் தேனுண்ணும்
வண்டெனநானென விதியமைத்து
தண்டினை காம்பினைத் தளிர்மலர்பூவினைக்
கொண்டவள் நீயென தேன் அளைந்தான்

Wednesday, 11 July 2012

காதல் மறந்தனையோ?

              (தலைவன் ஏக்கம்)

தாவொன்று தீயென்று கேட்டது யார் - வானத்
தண்ணிலவுப் பெண்ணே தீய்ப்பதென்ன
பாவைநீ போவென்றும் கூறலென்ன - வண்ணப்
பால்வெண்ம திநீயும் போவதெங்கே
நாவெழும் சொல்கொண்ட மாற்றமென்ன - பின்பு
நான் கொண்ட காதலுக் கானதென்ன
தேவையும் போனதும்தென்றலென - ஓடித்
தேகம் தழுவமறுத்த தென்ன

சோவென்று பால்பொழி வெண்ணிலவில் - அவள்
சாயென்று என்னை மடியிருத்தி
சாவென்றே ஒன்று வரும் வரையும் -  உன்னைச்
சார்ந்து கிடப்பேனென் றன்றுரைத்தாள்
பூவென்ற உள்ளம் பொழுதிருளப் -  பல
பொய்யென்ற வண்ணம் எடுப்பதுண்டோ
நாவென்ற பக்கம் மெல்லா உருளும் - ஆயின்
நாமென்ற அன்பு புரள்வதென்ன

காவொன்றில் கோநடை கொள்ளவந்தால் - உடன்
வா என்ன போரென்று வாள்கொண்டதென்?
பூவென்றும் தேனென்றும் காணவந்தேன் - மனம்
பொல்லாவிழி கொண்டு என்னை வென்றாய்
நீவென்ற தாயின்று யார் சொன்னதோ - என்றன்
நெஞ்சில் சிறைகொண்டேன் உன்னை இங்கே
தூவென்றென் னைவிட்டுத் தூரம்செல்ல -அந்த
தெய்வம் விட்டவழி தீர்வு என்ன?

ஓவென்று உள்ளமுனை நினைத்து - மனம்
ஓடென்று உன்னெழில் பின்னலைந்து
நாடென்று நாடிப் பறித்தெடுத்து  - உன்னில்
நானென்று ஆகுமிவ் வேளைதனில்
தாயென்று உன்னன்பு காத்துநிற்க - நீயோ
தாமென்றும் தீம்மென்று துள்ளிவிட்டு
தேயென்று திங்களின் தேய்வளித்தால் -அந்த
தெய்வத்தின் நெஞ்சும் பொறுத்திடுமோ

ஆவென்று போற்றுமுன் அன்பு தனும் - சதி
யாரென்ன செய்யினும் அற்றிடுமோ
ஆவென்றேன் என்றிடும் பொய்மொழியைச் - சொல்லி
ஆகஎன் உள்ளத்தை ஏய்த்தனையோ
வாவென்று கோவுறை ஆலயத்தில் - அன்று
வந்து நின்றே மாலைகொண்டதென்ன
ஆவது தெய்வம் நினப்பதொன்றே - நீயும்
ஆயிரம் கொண்டென்ன மாறிவிடும்

Saturday, 7 July 2012

அலரும் மலரும் அவளும்

            

(அவன் ஆற்றாமை)
ஒயிலன்ன நடை கடலின் அலைபுரைய நெளிகுழலும்
கையிலென்ன மலர் காந்தாள் காணுமெழில் மதியுறல
வெயிலென்ன விழிகூர்மை தருமான தகிப்பெழவும்,
துயிலென்ன விடுஎன்று துயர் செய்வள் நிகர்வாளின்

கொடும்வீச்சின் செயலொப்ப குளிர்காற்றின் கூர்மையது
விடும்வேலின் தகையன்ன விடலைஉடல் புயல்கடுப்ப
தொடுமலரின் கணைவீச்சில் துயரேய்ப்ப தருமிவளை
படும் கதிரின் ஒளிபுல்லின் பனியியைய உருகினவன்

(மலரின் ஆற்றாமை:)
வளையலொலி பெருகமலர் வடிவிற் றனை வென்றவளும்
அளைமேகக் கூந்தல் தனையடைய அதன்நறுமணமும்
விளையின்பம் தருநாற்றம் வியந்து மனம்சிறுமை கொள
களைபோமென் றெண்ணியுடன் கருகுவது போற்குவியும்

துளை மூங்கில் ஊதுமது தேடும்கரு வண்டிதழின்
மழைஈரம் மெழுகுஎழில் மலரிதழில் இல்லையென
இழையொத்த இடைகொடியின் இசைநளினஎழில் போதை
விளை வகையும் கண்டு தனை விடுமென்று மீளலரும்

(அவளோ)
வளைகொடியின் மலரும் கணம் மலருவதும் ஒடிவதுவும்
முளைபயிரின் பசும்தனை முகமதிடை புனையிவளும்
சுளை தேனில் ஊறும்இனி சொல்மீட்டும் கருவிமலர்
களைகொண்டு விரியும்கணம் கருவண்டில் அஞ்சிவிடும்

Sunday, 8 April 2012

மேற்கடி வான் சந்திரனோ


மேடை ஆடும் நாடகத்தின் இடைவெளிதான் - நான்
மெல்லச் சுற்றும் பம்பரத்தின் நிலையடி காண்
ஆடை மாற்றிக் கொள்வதென்ன அழகடிதான் - நீ
அன்பை மாற்றி கொண்ட தேனோ அழவடி நான்
தேடி யேதும் கொண்ட தில்லை இதுவரைதான் - நான்
தேவ ராஜ சோபை கொண்ட உருவடி காண்
பாடிப் பார்த்துங் கதவு திறக்க இலையடியேன் - உன்
பாசமுள்ள இதய வாசல் இரும்பெனவோ?

செய்துவைத்த சிலையென் றெண்ணித் தள்ளினையோ - நான்
தெருவில் வீழ்ந்து உடைந்தபோது உருகினையோ
கொய்த மலர் வாடு மென்று அறிந்திலையோ - நான்
கொட்டி விட்ட தீயில் காலை வைத்தவனோ
எய்த அம்பு பட்டு உள்ளம் சிதறியதோ - நான்
எழுந்துநிற்க உனது வானம் இருண்டதுவோ?
நெய்த சேலை மேனி கொண்ட நிலவொளியே - நீ
நீல வான மென் மனதின் பௌர்ணமியே

மானம் காக்கச் சேலைசுற்று மேனியளே - உன்
மாமன் உள்ளம் காக்க ஏது மறந்தனையே
போன காலம் மீண்டும் எண்ணி அழுதிடவோ - இப்
பொன் நிகர்த்த வாழ்வு நாளும் பழுதிடவோ
வானம் பூத்த மின்னு மந்த தாரகைகள் - என்
வாழ்வில் காண எண்ண வார்த்தை பொய்த்ததென்ன?
கான கத்தில் நள்ளி ராவில் கால்தடுக்கி - எனைக்
கருங் குழியுள் வீழ்த்திக் கண்டு சிரித்ததென்ன?


பொய் விழுந்து நெஞ்சம் என்னும் பாலினிலே - ஓர்
புகையெழுந்து நஞ்சுஎன்று மாறுவதேன்
கையெழுந்து  தெய்வமென்று நான்தொழநீ - ஓர்
காலன் போல வந்து நின்ற காட்சியென்ன?
மையெழுதும் கண்கள்கொண்ட பெண்ணிலவே - நீ
மறந்ததேது மலரவீட்டு முற்றத்திலே
செய்வதென்ன சாகசமோ தந்திரமோ -நீ
செந்நிறத்து மேற்கடி வான் சந்திரனோ