Pages

Saturday 31 December 2011

இயற்கையில் எழிலானவள்


மனவானி லொருநாளில் நிலவொன்று அழகோடு
எனதாசை உளம்மீது வலம் வந்ததே
 கனவோடு மனம்சேர்ந்து களித்தேங்கும்நிலையாகி
தினமேங்கும் இவள்கொண்ட எழில் கொஞ்சவே

வளமான இளமேனி வளைந்தாடும்நிலைகண்டு
குளமான தலைதன்னை குறைசொல்லுமே
பழமான துண்ணாமல் பரிதாபம் கிளியொன்று
இதழென்னும் கனிகண்டு இருந்தேங்குமே

நுழைகின்ற மனதோடு நுகரின்ப மணம்கொள்ள
விழைகின்ற காற்றோடி உனைநாடுமே
வளைகின்ற இடைமீது வந்தாடி அதுஒன்றும்
இலையென்ற நிலைகண்டு பயந்தோடுமே

கனிவாழைஉடல்கண்டு கருமந்தி பழம்கொய்ய
நுனி சோலைமரம்தாவி கிளைதூங்குமே
தனிவாழை இதுவல்ல தடுமாறி இதுவென்ன
கனிநூறு பலதென்று மனம்நாணுமே

பொழுதோ ஓரிரவாகிப் பொன்னிலா வருகுதென்
றிவள்வதன எழில் கண்டு இருள் கூட்டுமே
களவே தம் தொழிலாக கைகொண்டசிலபேரும்

இவள்கோவிற் சிலையென்று விலைசொல்வரே

வளைகின்ற அடிவானில் விழுகின்ற கதிராலே
களைகொண்டு செவ்வானம் கலை காணுமே
இவள்நாண இருகன்னம் எழுகிற செவ்வண்ணம்

எழில்காண மனம் கோணி முகில் சோர்ந்ததே

குளநீரில் இவள்நீந்த கயல்மீனும்விழிகண்டு
வலைபோட்டுப் பிடித்தாள்வஞ் சகி என்னுமே
குழல்கூந்தல் அவிழ்ந்தாட குளிர்நீரில் முகில்வந்து
விழுந்தானே எனமீனின் குஞ்சோடுமே


கழல்பாத மணியோசை கால்துள்ளி சல்லென்ற
விளையாடு மொலி கேட்டு தேர்வந்ததே
அழகான திருமாலின் அயல் சேரும் திருமகளும்
ஒளிதந்தாள் என ஏழை நிலம்வீழ்வனே

ஒயிலான உடல் தூங்கும் மணிமாலைஅணியாவும்
இவளாலே மெருகேறித் தரம் கண்டதே
மயில்போலும் நடை கண்டு மழைமேகம்வருமென்று
வயல்நின்ற எருதோ தன் வீடேகுமே


தரைமீது இவள்செல்ல தனியே ஓர்பூந்தோட்டம்
விரைந்தோடுதென வண்டு வெறி கொள்ளுதே
அரவிந்தன் அடிவானில் வருகின்றஒருவேளை
தெரிகின்ற ஒளிபோலும் இவள்கூடிலே