Pages

Monday 6 February 2012

காதல் மயக்கம் 2




2. இளமை மயக்கம்

கண்களிரண்டதும் துள்ளும்கயலெனில்
காணுமுகமதி பொய்த்துவிடும்
வெண்ணிலவே இந்த வட்டமுகமெனில்
வண்ணஇதழ் கொவ்வை வந்ததுபொய்
எண்ணீயிவள்இதழ் கொவ்வைஎனில் அங்கு
எப்படி உள்ளிடை முத்துக்களோ
அண்ணளவாய் இவைஒன்றுமில்லை அந்த
இந்திரலோகத்து பொற்சிலையோ

பொன்னும் பளிங்கதும் போதாநவமணி
கொண்டு செதுக்கிய சிற்பமதோ
இன்னும் பிரமனும் இத்தனைநாளில்லா
அற்புதம் செய்ய விளைந்தனனோ
மின்னும் அழகுடன் என்னயல் நின்றவள்
மூத்தவள் தன்னை விழிசரித்து
”என்னுடை அன்னையைப் பெற்றவளாமிவள்
இன்று தனதில்லம் மீளுகிறாள்

அன்னையவள் இனி ஒரடிகூட
எடுத்துநடந்திடும் ஆற்றல் கெட்டாள்
இன்னுமடைந்திட நீண்ட தொலையுண்டு
எப்படி என்று மயங்குகிறேன்
தன்னந்தனிதுணை வந்துவிட்டேன் ஏதும்
தக்க உதவிகள் செய்குவீரோ”
கன்னம் விழிமழை கண்டிடுமோ என்னும்
வண்ணம் விரல்கள் பிசைந்து நின்றாள்

கிண்ணமதில் விரல் சுண்டியதால் வரும்
கிண்ணெனும் நாதக் குரலெடுத்து
மண்ணிற் பெரும்வீர மாமறமும்வந்து
மண்டியிடவைக்கும் பேரழகில்
எண்ணிக் கணக்கிடா ஆண்டவனும் அள்ளி
இட்டபொலிவுடன் நின்றவளோ
வண்ணமுகத்தினில் சோகமுறச் சொன்ன
வார்த்தைகண்டு மனமாவலுற்றேன்

சற்று தொலைவினில் சுந்தரத்தின் பையன்
சுற்றிவளைந்தொரு மாட்டுவண்டி
விற்றுவிட பெரும்சந்தையிலே பழம்
வைத்தொரு கூடை இறக்கிவிட்டு
நிற்பதைக் கண்டு மனம்மகிழ்ந்து - அந்த
நீலவிண்ணின் மதிதங்கையினை
உற்ற வழிஒன்று தோன்றியதேயென
ஓர்பயமில்லையென் றாற்றுவித்தேன்

முன்னம் இருந்தவன் சின்னவயதினன்
மெல்ல அணுகிநான் சேதி சொல்ல
அன்னமெனும் எழில்மங்கை தனைகண்டு
ஆவல் மீறத் தலையாட்டி வைத்தான்
அன்னை தனும் அவள் ஆக இருவரும்
அந்தியிருள் மூடும் வேளையிலே
இன்பமுடன் சென்று வாருமென்றேன் இந்த
ஏழை பெரிதும் உவகை கொண்டேன்

கண்ணை விழித்தனள்அச்சம்கொண்டு அந்த
கட்டழகன்தனைச் சுட்டியொரு
எண்ணமதில் பயம்கொண்டேன் அவனிங்கு
என்னை விழிப்பது ஏற்றதன்று
உண்ணுமதுவென கண்களினால் ஏதோ
உள்ளேநினைந்தவன் புன்னகைத்தான்
அண்ணா நீங்கள் கூடவந்திடுவீரென
ஆவலுற முகம் பார்த்துநின்றாள்

கூடிப்பயணமும் செய்வதென அவள்
கேட்கமனம்  கொண்டு சம்மத்தித்தேன்
ஆடிச் சிறுவழி ஒடி நடந்திடும்
ஆனந்த வண்டியில் நாம் புகுந்தோம்
தேடித்திசைதனில் போகும்வண்டிதனின்
துள்ளுமெழில் அலைபோலசைய
பாடிக்களித்திட எண்ணியவனொரு
பாட்டிசைத்தான் முன்னேபாதைகண்டோன்

(அவன் பாடுகிறான்)
ஆத்தினிலேவெள்ளம் வந்து அலையடிக்குது
அதிலிரண்டு கயல்புரண்டு துடிதுடிக்குது
சேத்தினிலே பூமலர்ந்து சிரித்துநிற்குது
செங்கனியின் வண்ணமுடன் செழுமைகாணுது
நேத்துவந்த மாமனுக்கு நெஞ்சு குளிருது
நிலவுவந்து நேரில் நின்று ஒளியைவீசுது
சாத்திரங்கள் பாத்துபாத்து சரியென்றானது
சாமிகூட பூவிழுத்தி சம்மதிக்குது

வாத்தியாரு பெத்தபொண்ணு சட்டம்பேசுது
வந்துநில்லு பக்க மென்றால் வாதம்பண்ணுது
கூத்தடிச்சுச் சின்னதோட கூடியாடுது
குழந்தையாக அழுதுகொஞ்சம் கோவம் கொள்ளுது
பாத்துப் பாத்து எத்தனைநாள் காவல் காப்பது
பழமிருக்கு பக்கத்திலே பொழுது மாளுது
காத்தடிக்கும் வேளையிலே தூற்றத்தோணுது
காட்டுமலர் தோற்றத்திலே கண்ணைஇழுக்குது

முன்னிரவு குளிரடிச்சு மேனி நடுங்குது
மூச்சினிலேபூவின் வாசம் மோகம்கூட்டுது
பின்னிலவு தூக்கம்விட்டு என்னைஎழுப்புது
பேசவென்று எவருமில்லை பாவம் விதியிது
கன்னி யவள் நெஞ்சம் காணும் காதலானது
காணும் பச்சை இலைமறைத்த காயென்றானது
சின்னப்பொண்ணு கண்ணசைவில் என்னசொல்லுது
சேர்ந்திடலாம் என்பதனை தின்று விழுங்குது

******************

பாடியவன் கடைக் கண்ணெடுத்துஅவள்
பாவைதனை இடை நோக்குவதும்
ஓடிய மாட்டினை ஓங்கிவிரட்டியே
ஒன்றுஇல்லையென காட்டுவதும்
தேடியே காதலை திங்கள் முகவிழி
தேன் மலராளிடம் காத்துநிற்க
ஆடிய வண்டியின் ஆட்டத்திலேஅவள்
அல்லியென நடமாடிநின்றாள்

மெல்ல அவள்மனம் மாறியதோ இந்தப்
மாயமனம் தன்னை நான் அறியேன்
கல்லும் கரைத்திடும் கட்டழகைகொண்ட
காளை அவன் விழிமோதிடவே
வல்லமன தனல்நெய்யெனவே விட்டு
வாசமெழ வழிந்தோடக் கண்டேன்
நல்லதுவோ இல்லை அல்லதுவோஅதை
நானோ புரிந்துகொள்ளாது நின்றேன்.

மேலைத் திசையினில் மேகம்கறுத்திட
மாலைக் கிழவனும் ஆடிவந்து
வாலைக்குமரி யென்றாடும் சுழல்புவி
வண்ணமகளிடம் மாயமிட்டு
ஓலைபிரித்தொரு மந்திரம்சொல்லிட
ஓடிக் கருத்தது விண்ணரங்கு
ஆலைமுடிந்தொரு சங்குகள் கூவிட
ஆடிப்பறந்தன வான்குருவி

தென்றலணைந்தங்கு வீசியதுஅது
தேகம் வருடியேஓடியது
நின்றமரங்களின் மீதுஅதுபட
நெஞ்சை நிமிர்த்திச் சிரித்தன காண்
குன்றதன் பின்னே குடியிருந்த மதி
கோலமிட்டு முகம் பொன்குழைத்து
நன்றெனப்பூசி நளினமிட்டே விண்ணில்
நானிலம் காண நடைநடந்தாள்

உள்ளம் மயங்கிடும் வேளையது மேனி
உணர்வு வென்றிடும் நேரமது
கள்ளைஉணவென்று உண்டதென இரு
கண்ணும் மயங்கிடும் மாலையது
தெள்ளெனும் நீரினில் கல்விழுதலெனக்
கன்னியின் உள்ளம் கலங்கியதோ
மெள்ள அவனதைக் கண்டுகொள்ள அந்த
மேடையில் நாடகம் கண்டுநின்றேன்

(தொடரும்)

0 comments:

Post a Comment