Pages

Tuesday 10 September 2013

தீயாகி நின்றாள்

தொய்ந்தோடும் மேகமிடை தூங்கியெழும் வெய்யோனும்
நெய்யூற்றும் வேள்வியிலே தள்ளுவதாய் - இம்
மெய்கொண்ட மானிடனை மேதினியில் கருகிவிடச்
செய்கின்ற துன்பமதைத் செய்பவளே

மைகொண்டு விழிபூசி மலர்கொண்டு எனைநோக்கிக்
கைகொண்ட கணைபூட்டி வீசுகையில் - நான்
நெய்கொண்ட  பூக்களினை நினைக்கின்றேன் அழகெல்லாம்’
பொய்கொண்ட பூமியிடை ஓர்நாளே

செய்குண்டு போலுனது செயலெந்தன் இதயமதில்
போய்ங் கென்று வெடித்ததிலோ தூசானேன் - நீ
எய்கின்ற பூங்கணைகள் என்நஞ்சு பூசியதோ
நைய்கின்ற தாய் நெஞ்சு நலிவதுமேன்

துய்க்கின்ற வேதனைகள் தோள்மீது பூமாலை
வைக்கின்ற தீயாக வாட்டுவதேன் - ஓர்
பொய்கைக்குள் நீர்தானும் புனலாடப்போகையிலே
பூங்காற்றும் சேர்ந்தனலை கொட்டுவதேன்

பொய்க்குண்டோ வாழ்வுமுன் மெய்மீது பொய்வார்த்தால்
தைக்கொண்ட நாளில்நெற் கழனியிடை - எவர்
கைக்கொண்டு வைத்தமுளை கதிரானால் தலைகூனும்
மைக்கொண்ட  விழிக்கும்நான் மயங்குவனோ

தெய்த் தக்க என்றாடும் சின்னவளே சொல்லக்கேள்
எய்தக்க எத்தனையோ இருந்தாலும் - இது
தொய்தக்க வாழ்வல்ல தொலைதூரம் நீநின்றும்
உய்த்தோங்கப் பிறந்தோமே உணர்வாய்நீ


Saturday 9 March 2013

காதல்பரிசு

முன்நே ரிருவிழிகள் மொழிசொல் குறுநகையும்
தன்நேர் திருநடையும் தாளமிடும் கால்மணியும்
மின்னற் கொடிவிளையும் மோகனமும் முழுநிலவென்
பொன்வார் எழில்வதனப் பூங்கொடியாள் முன்னேஎன்

கண்ணிற் படவந்தாள்,கனிந்துமனத் தழல்சொரிய
வெண்ணை வழிதேக விளங்குமல ருறைவாசத்
தண்ணெழி லாள்தன்னைத் தாகமுற நான்நோக்க
எண்ணத் திருந்தஅவள் ஏக்கமது கண்டினித்தேன்

மண்ணிற் சிறுயிடையாள் மதுவழியு மிருஇதழைக்
கிண்ணத் திருவமுதம் தேவர்மறந் திருத்திவைத்த
வண்ண குவளையெனும் வாய்மலரின் தாகத்தை
உண்ணக் கருதிஅவ ளுள்ளதிசை மருகிநின்றேன்

செந்தாழம் பூந்தேகம் திரிந்துவ ளைந்தயிடைச்
சந்தும் சரிந்தெழுந்து சரசமிடும் பூம்பொதியும்
முந்தும் குணமும் முல்லையெனும் பல்லொளிரச்
சிந்தும் நகைமன்னர் திறைமணிக ளெனப்படர்ந்தே

இமைகள் துடித்திளமை இறுகமூச்செழ முடியா
தமைவன் தருதென்னத் திளங்கனியென் னிருசார்கொள்
குமைந்த வளைந்திழைந்து கொண்டுபரந் தினவெடுத்தே
சமைந்தழல் வெஞ்சரமெடுத் தழைந்திடவென் மனமிழையத்

தண்ணொளி யேதேனே தருமமென ஏதுமிலாக்
கிண்ணமெடுத் திரந்திருக்கும் கீழ்மகனைப் போலிரந்து
வண்ணக் குறுங்கனவே வாழ்வில்லை நீயென்னிற்
திண்மை குலைத்தசிறு தேரேநீ சேரென்னை

என்னத் திருமகளாள் இனிதுஉணர்ந் தனதிருகால்
பின்னப் பிழன்றுகுறை பிறைநிலவென் னுதல்பிறந்த
சின்னத் துளிவியர்வை சிந்துமள வச்சமெடுத்
தன்னநடை பயின்றணுகி அலைகுழலாள் எனதுவல

கன்னத் தொருகடிதினையே கனியவொரு மின்னலென
சொன்ன தொருஒளியும் கொள்ளத்தெம துதிரம்
தின்னவருங் கொசுவினறம் கொள்ளா வாழ்வணைத்த
தன்னவொரு விதமெடுத்தே தளிரென்மலர்க் கரமீந்தாள்

Wednesday 10 October 2012

காத்திரு பெண்ணே!


வெயில் வெறுத்தே உலகைவிட்டு
வீழுதடி மனசுதொட்டு
வயல் கரையில் ஆடிஉலா வந்தவளே - உன்
வடிவெடுத்து வானம் செம்மை கண்டதல்லோ

முயல்பிடித்தேன் மூணுகாலு
நெல்விதைத்தேன் சோழமாச்சு
இவள் மயக்க கதையளந்த மன்னவரே - உள்ளம்
எதைநினைத்து கலங்குகிறாள் இன்றவளே

கண்ணிலிட்ட மைகறுப்பு
காணுங் குரல் தளதளப்பு
என்னவட்டம் போடுகிறாய் சின்னவளே- உன்
இளமை என்னை கொல்லுதடி பொன்னவளே

மண்ணை ஆழஉழுதுவைத்து
மாடுரண்டை விரட்டிகிட்டு
கண்ணை மேல வைக்கிறீரே சின்னவரே - இது
கண்ணியமோ கூறுமய்யா பொன்னவரே?

சலசலத்து ஓடும்நதி
சற்று நடை தவறுமடி
சிலுசிலுத்த புல்வரம்பில் சித்திரமே - நீ
சிரித்து விட்டால் மாமன் கெட்டான் இக்கணமே

கலகலப்பு பேச்சிலிட்டு
கன்னிமனம் கலங்கவிட்டு
நிலவு நேரம் கைபிடிக்கும் நல்லவரே- உங்க
நினைவி லிங்கு காயும் நிலா வெந்ததுள்ளே

கலயமொன்று இடுப்பில் வைத்துக்
கைவடிக்கா சிலைநடந்து
வலை விரித்தே எனைப்பிடித்தாய் வல்லவளே- இந்த
வானத்துக்கும் மழை இருக்கு ஈரமுள்ளே

உலையிலிட்ட சோற்றினிலே
ஒருபருக்கை பதமெடுத்து
நிலையறிந்து வடிச்சிடலாம் மன்னவரே - உங்க
நினைவி லேது படிக்கணும் நான் இன்னுமல்லோ?

சலசலத்துக் காளை பூட்டி
சாலையிலே ஓடும்வண்டி
கலகலக்கும் உன் சலங்கை சத்தமடி - என்
காலமெல்லாம் உன்முகந்தான் மிச்சமடி

நெல்முதிரும் கதிர் வளையும்
நேரம்வரும் அறுவடைக்கும்
நல்லவரே வளைந்து நின்றேன் பாரய்யா - எந்த
நாளில் எனைக் கைபிடிபாய் கூறய்யா

வயல் விதைத்து வளரவிட்டு
வளம் கொழிக்க அறுத்தெடுத்து
வசதியுடன் மாமன் நிற்பான் தையிலே - அப்போ
வாழ்வில் உனைக் கலந்திடுவேன் பொய்யில்லே

புயல் அடிக்கும் மழையும்கொட்டும்
புகுந்த வெள்ளம் குடியழிக்கும்
அயல் முழுக்க கிசுகிசுக்கும் நல்லவரே -- உயிர்
அதுவரைக்கும், துடித்திருக்கும் என்னவரே!

Monday 1 October 2012

என்ன மாயமோ

கண்ணெதிரில் குதித்தோடும் நதியெனக்
  காணும் மகிழ்வு கொண்டாள் - உயர்
வெண்முகிலும் கொண்ட வானநிலவென
  வண்ணம் மறைந்து கொண்டாள் 
திண்ணமிதே அந்த தென்றலென விழி
  தன்னில் குளுமை கொண்டாள் - ஏதும்
பண்ணாமலே உயிர் வேதனை ஆக்கிப்பின்
   பாதியென் றாகிவிட்டாள் 
    
கண்களினைக் கயலென்று சொன்னார் அவை
  காணுமோ என்றிகழ்ந்தேன் - இது
பெண்மயிலோ எனப் பேச்சுரைத்தார் இவள்
  பேதமை யில் நகைத்தேன்
எண்ணமின்றி அயல் சென்றவனை அட
  எப்படி மாற்றினளோ - இரு
கண்ணசைவில் என்னை கொள்ளையிடும் வகை
  கண்டு திகைத்துநின்றேன்

பொன்னெனு மோரெழில் மாலை கண்டேன் சுடர்
  போகமயங்கி நின்றேன் - பசுந்
தென்னோலையில் நடஞ்செய்யுந் தென்றல்தொட
  தேகம்சிலிர்க்க நின்றேன்
என்னானதோ இவள் பார்வைபட இவை
  அத்தனையும் மறந்தேன் - என்ன
சொன்னால் நடந்திடும் மாயமென அவள்
  சுட்டும் வழிநடந்தேன்
 
தண்டாடும் பொய்கையின் தாமரையின் எழில்
  தன்னை இரசித்திருந்தேன் -அதில்
கொண்டாடிக் கும்மாளம் போடும் அலையிடை
  கூடிக் களித்திருந்தேன்
திண்டாடிக் காயம் எடுத்த மனதினில்
  தென்பினை ஊட்டவென - நிற்கக்
கண்டோடி என்னில் கலந்தவளோ இது
  காண்சுகம் அல்லவென்றாள்

சொண்டோடிச் செவ்வண்ண மானகிளி சொல்லும்
  செல்ல மொழியுடையாள் - கடல்
நண்டோடி ஊரும் நடை பயில்வாள் இந்த
  நானிலத்தில் எழிலாள்
தொண்டாகித் தூய மனமெடுத்தாள் எனைத்
  தோழமை கொள்ள வைத்தே - ஒரு
செண்டாகிப் பூவாய் தினம் மலர்வாள் எனைச்
   சித்தம் பிழற வைத்தாள்

Monday 24 September 2012

வா என் செல்லம்!

கண்கள் என்னும் மின்னல்பட்டு காதல்வந்ததோ இல்லை
பெண்கள் கூந்தல் முல்லைமொட்டு வாசம் கொல்லுதோ
உண்ண எங்கும் தேனின் சொட்டு ஊற்று கின்றதோ - மலர்
உன்னத்தொட்டுக் கொள்ளுஎன்று என்னை தூண்டுதோ

சின்னசிட்டு வானம்தொட்டுத் துரப் போகுதே - ஆசை
என்னைத் தட்டி ஏக்கம் கொள்ள இன்ப மாகுதே
உன்னைத் தொட்டுகொள்ள நீயும் ஓடிச்செல்வதேன் -அந்தக்
கன்னம் தொட்டுக் கொள்ள வாழ்வில்காலம் உள்ளதோ

கொட்டுவானம் பூமி வந்து வீழும் வெள்ளமே உனை
கட்டிக் கையுள் காணும்போது இன்பம் கொள்ளுதே
வட்டக் கண்ணில் பார்வையென்ன வெட்டும் மின்னலே -அதில்
தட்டத் தட்டச் சத்தபோடும் எந்தன் நெஞ்சமே

அச்சமின்றி பக்கம்வாடி அன்புதெய்வம்நீ -உந்தன்
மச்சக் கண்ணில் என்னைப் போட்டு வைச்சதென்ன தீ
உச்சிவானின் வெண்ணிலாவின் தங்கையாமோ நீ - மனம்
இச்சைகொண்டு காயும் தாகம், கொல்லுதேமே னி

பச்சைமேனி மஞ்சள் பூசி பார்வை கொள்ளவே - நீயும்
வைச்சகண்ணும் என்னைக் கொல்ல வாழ்வதெப்படி?
கச்சை மார்பில் வெப்பமூச்சு சுட்ட துன்பமே அதை
இச்சை கொண்டு நானணைக்க பக்கம் நில்லடி

கொண்டை மாலை சூட்டிஉன்னைக் கோலமாகவே - நானும்
செண்டுப்பூவை கொள்வதாக செல்லமாகவே
வண்டுபோல வந்துநின்று வாழ்வுகாணலாம் ஊரும்
ரண்டுபேரும் நல்லஜோடி என்றுவாழ்த்தணும்

Thursday 30 August 2012

காதலர் சங்கமம்

கனிமலர் பூத்திடும் இளமலர்ச் சோலையில்
காதலி தேடியே அவன் நடந்தான்
இனிமன தானவள் எழில்பொழில் நீரொடு
இழைந்திட மலராய் நனைந் திருந்தாள்
தனிமையில் வேகிட தலைமுதல் கால்வரை
தகித்திடத் தீய்ந்திடும் மேனியினள்
நனிகுளிர்த் தாமரை நடமிடும் கோலமென்
றலைதனில் ஆடியே குளிரநின்றாள்

இளையவன் பார்த்திரு விழிகளும்கூசிட
எரியழல் பூத்தொரு தாமரையாய்
விளையுறும் மோகமும் விழிகளில் தாகமும்
வினைகொளுந் துயரெழ மனமிழந்தான்
துளையிடு மூங்கிலில் புகுவிரை காற்றினில்
தோன்றிடும் இசையென மீட்டிடவே
வளைபுகு நண்டென விரல்களும் ஓடியே
விந்தைகள் கண்டிட வேண்டிநின்றான்

தணிகனல் பொழிலலை தடவிய தென்றலும்
தரையினில் மலர்களின் மணம் விடுத்து
அணியெழில் குறுநகை எழுமிதழ் உடல்மணம்
இனிதென கண்டதைக் கொண்டதுவே
மணியிடை காணுமோர் நெளிவினை தானலை
மனதினில் கொண்டதைப் போல்நெளிய
அணிகுழல் தானலை விரிந்திட மீன்களும்
அது ஒருவலையென அஞ்சினவே

கரைதனில் காவலன் கனிஉண வினைகொள
காத்திட இவளோ கரைநினைந்து
விரைந்திடநீர்வழிந் தலைதனில் வீழ்ந்திட
வேகுடல் நீர்சுட ஓடினமீன்
நுரையெழுமதுவினை நிறையிதழ் மேற்கினில்
கடல்விழு சுடுபழம்போல்சிவந்தே
நரைகரு முகிலினை நிகரிரு குழல்முடி
நடுநுத லசைவதில் அழகடைந்தாள்

புனையணி உடைதனை மதன்விடுகணைபட
பெருகிடும் தீயதைப் பொசுக்கிடுமே
எனமன மஞ்சிய சிறியவள் நிலைதனில்
அணிவதோ விடுவதோ எனமயங்க
கனமொடு வளர்கனி நிலவெழப் பாலொளி
கவிந்தொரு தோட்டமென் றிருள்மறைய
தினவெடு தோளினன் இரவினில் யாசகன்
தேர்ந்திடு பசியொடு குணமழிந்தான்

பண்ணொடு இசைதரும் பளிங்கெனும் சிலைமகள்
பக்க மணைந்ததும் நுனிவிரலால்
விண்ணிடி மழையுடன் வருமொரு மின்னலை
விரல்தொடும் நினைவுடன் மெலவணைத்தான்
செண்டென பூவனம் செறிமலர் தேனுண்ணும்
வண்டெனநானென விதியமைத்து
தண்டினை காம்பினைத் தளிர்மலர்பூவினைக்
கொண்டவள் நீயென தேன் அளைந்தான்
கனிமலர் பூத்திடும் இளமலர்ச் சோலையில்
காதலி தேடியே அவன் நடந்தான்
இனிமன தானவள் எழில்பொழில் நீரொடு
இழைந்திட மலராய் நனைந் திருந்தாள்
தனிமையில் வேகிட தலைமுதல் கால்வரை
தகித்திடத் தீய்ந்திடும் மேனியினள்
நனிகுளிர்த் தாமரை நடமிடும் கோலமென்
றலைதனில் ஆடியே குளிரநின்றாள்

இளையவன் பார்த்திரு விழிகளும்கூசிட
எரியழல் பூத்தொரு தாமரையாய்
விளையுறும் மோகமும் விழிகளில் தாகமும்
வினைகொளுந் துயரெழ மனமிழந்தான்
துளையிடு மூங்கிலில் புகுவிரை காற்றினில்
தோன்றிடும் இசையென மீட்டிடவே
வளைபுகு நண்டென விரல்களும் ஓடியே
விந்தைகள் கண்டிட வேண்டிநின்றான்

தணிகனல் பொழிலலை தடவிய தென்றலும்
தரையினில் மலர்களின் மணம் விடுத்து
அணியெழில் குறுநகை எழுமிதழ் உடல்மணம்
இனிதென கண்டதைக் கொண்டதுவே
மணியிடை காணுமோர் நெளிவினை தானலை
மனதினில் கொண்டதைப் போல்நெளிய
அணிகுழல் தானலை விரிந்திட மீன்களும்
அது ஒருவலையென அஞ்சினவே

கரைதனில் காவலன் கனிஉண வினைகொள
காத்திட இவளோ கரைநினைந்து
விரைந்திடநீர்வழிந் தலைதனில் வீழ்ந்திட
வேகுடல் நீர்சுட ஓடினமீன்
நுரையெழுமதுவினை நிறையிதழ் மேற்கினில்
கடல்விழு சுடுபழம்போல்சிவந்தே
நரைகரு முகிலினை நிகரிரு குழல்முடி
நடுநுத லசைவதில் அழகடைந்தாள்

புனையணி உடைதனை மதன்விடுகணைபட
பெருகிடும் தீயதைப் பொசுக்கிடுமே
எனமன மஞ்சிய சிறியவள் நிலைதனில்
அணிவதோ விடுவதோ எனமயங்க
கனமொடு வளர்கனி நிலவெழப் பாலொளி
கவிந்தொரு தோட்டமென் றிருள்மறைய
தினவெடு தோளினன் இரவினில் யாசகன்
தேர்ந்திடு பசியொடு குணமழிந்தான்

பண்ணொடு இசைதரும் பளிங்கெனும் சிலைமகள்
பக்க மணைந்ததும் நுனிவிரலால்
விண்ணிடி மழையுடன் வருமொரு மின்னலை
விரல்தொடும் நினைவுடன் மெலவணைத்தான்
செண்டென பூவனம் செறிமலர் தேனுண்ணும்
வண்டெனநானென விதியமைத்து
தண்டினை காம்பினைத் தளிர்மலர்பூவினைக்
கொண்டவள் நீயென தேன் அளைந்தான்

Wednesday 11 July 2012

காதல் மறந்தனையோ?

              (தலைவன் ஏக்கம்)

தாவொன்று தீயென்று கேட்டது யார் - வானத்
தண்ணிலவுப் பெண்ணே தீய்ப்பதென்ன
பாவைநீ போவென்றும் கூறலென்ன - வண்ணப்
பால்வெண்ம திநீயும் போவதெங்கே
நாவெழும் சொல்கொண்ட மாற்றமென்ன - பின்பு
நான் கொண்ட காதலுக் கானதென்ன
தேவையும் போனதும்தென்றலென - ஓடித்
தேகம் தழுவமறுத்த தென்ன

சோவென்று பால்பொழி வெண்ணிலவில் - அவள்
சாயென்று என்னை மடியிருத்தி
சாவென்றே ஒன்று வரும் வரையும் -  உன்னைச்
சார்ந்து கிடப்பேனென் றன்றுரைத்தாள்
பூவென்ற உள்ளம் பொழுதிருளப் -  பல
பொய்யென்ற வண்ணம் எடுப்பதுண்டோ
நாவென்ற பக்கம் மெல்லா உருளும் - ஆயின்
நாமென்ற அன்பு புரள்வதென்ன

காவொன்றில் கோநடை கொள்ளவந்தால் - உடன்
வா என்ன போரென்று வாள்கொண்டதென்?
பூவென்றும் தேனென்றும் காணவந்தேன் - மனம்
பொல்லாவிழி கொண்டு என்னை வென்றாய்
நீவென்ற தாயின்று யார் சொன்னதோ - என்றன்
நெஞ்சில் சிறைகொண்டேன் உன்னை இங்கே
தூவென்றென் னைவிட்டுத் தூரம்செல்ல -அந்த
தெய்வம் விட்டவழி தீர்வு என்ன?

ஓவென்று உள்ளமுனை நினைத்து - மனம்
ஓடென்று உன்னெழில் பின்னலைந்து
நாடென்று நாடிப் பறித்தெடுத்து  - உன்னில்
நானென்று ஆகுமிவ் வேளைதனில்
தாயென்று உன்னன்பு காத்துநிற்க - நீயோ
தாமென்றும் தீம்மென்று துள்ளிவிட்டு
தேயென்று திங்களின் தேய்வளித்தால் -அந்த
தெய்வத்தின் நெஞ்சும் பொறுத்திடுமோ

ஆவென்று போற்றுமுன் அன்பு தனும் - சதி
யாரென்ன செய்யினும் அற்றிடுமோ
ஆவென்றேன் என்றிடும் பொய்மொழியைச் - சொல்லி
ஆகஎன் உள்ளத்தை ஏய்த்தனையோ
வாவென்று கோவுறை ஆலயத்தில் - அன்று
வந்து நின்றே மாலைகொண்டதென்ன
ஆவது தெய்வம் நினப்பதொன்றே - நீயும்
ஆயிரம் கொண்டென்ன மாறிவிடும்