Pages

Friday 2 March 2012

தென்றல் விடு தூது

தென்றலே நில்லடி தேடிஅலைந்தனை
தோல்வி கண்டு துவளாதே - அன்று
சென்றவர் வந்திடத் தெய்வந் துணையுண்டு
தேம்பி அழுவதுவீணே - தினம்
முன்றலில் மல்லிகை முல்லையும் தொட்டுநீ
மெல்ல ஓடித்திரிவாயே - இன்று
துன்பமே எம்முடை சொந்தமென் றானதோ
தோழி எனைப் பிரியாதே

கண்களும் நீரிடக் கன்னங்கள் ஊறிடக்
காணு கின்றோம் எதனாலே - அவர்
பெண்களும் கல்லென எண்ணியும்பேசிடப்
பூவெனப் பொய்யுரைப் பாரே - அதோ
வெண்ணில வுப்பெண்ணும் வெட்கம்விட்டேதினம்
விண்ணில் தேடித் திரிந்தாளே- அவள்
கண்ணிலே வானொளி காணும்வரை சுற்றிக்
கட்டுடலும் மெலிந்தாளே

அந்தர வானிடை யெங்குமலைந்திடும்
ஆசைநிறை தென்றலாளே - நீயும்
சுந்தர மாவுல கெங்கணும் சுற்றுவை
செல்வழி என்னவர் காணின் - உடன்
இந்தவோர் செய்தியை எப்படி யாயினும்
இட்டுவி டென்னவர் காதில் - இவள்
எந்தளவோ துயர் கொண்டனள் இங்கென
உண்மை தொட்டுச் சொல்வாயே

சந்தணமேனியும் சஞ்சல மாக்கிடும்
சிந்தனை செய்மதி ரண்டும் - இவை
எந்தன்மன துடன் கொண்ட பகைத்தனில்
என்னைப் பிரிந்திடக் கூடும் -ஆயின்
இந்த நிலைவரின் செய்வதென்ன பிழை
என்ன தல்லஅவ ராகும் - எனை
நிந்தைசெய் தெங்குநீர் வாழினும் தூற்றிடும்
நிச்சயம் ஊர்வரும் நாளும்

முந்தியுடல் வலிகொண்டு பகைத்திட
முன்னெழுந் தென்னுயிர் ஓடும் - அதில்
எந்தனின் சந்தண மேனிவிதி யென
இச்சை யுடன்தீயை நாடும் - எவள்
சுந்தரியோ என்ன மந்திரமோ உமைச்
சுற்றிய மாயங்கள் தீரும் - இனி
வந்து பிணக்கினைத் தீர்த்துவிடு மன்றேல்
வாசலில் சங்கொலி கேட்கும்


0 comments:

Post a Comment