Pages

Tuesday 8 November 2011

காதல் கசந்தபோது.......

நிலவென்றேன் காதலும்கொண்டேன்-என்
நினைவெங்கு மவள் கண்டு நெஞ்சம் நிறைந்தேன்
பலமின்றி உயிர் வாடும் வேளை -அவள்
பெருவானில் தொலைவோடு பேசாது நின்றாள்

மலரென்று அவள் பேரைச்சொன்னேன் முழு
மனம்கொண்டு அவளோடு கதைபேசிநின்றேன்
இலதென்று துணை வேண்டும்போது -  அவள்
இதழ்மூடி முகிழாது ஏனோ கிடந்தாள்

கலையென்று அவள்எழில்கண்டேன்- என்
கனவான உளிகாணாச் சிலைநீயே என்றேன்
நிலையழிந் துழன்றிடும் நேரம்- அவள்
நெஞ்சமோ கல்லாக நின்றதைக் கண்டேன்

வலைகொள்ளும் விழிகயல் என்றேன் -அவள்
வதனத்தை கமலமென் மலரென்று சொன்னேன்
உலைந்துள்ளம் துயர் கொண்டவேளை -அவள்
ஓடுமீன் நடுவாவி எட்டாப் பூவானாள்

எழில்நடை அன்னமே என்றேன் -நீ
எழுந்தாடும் மயில் நடம் இடைதானுமென்றேன்
அழிகின்ற நிலைகொண்டபோதோ -அவள்
அசைந்தாடி மனமேடை அதிரநடம் செய்தாள்

குழலான மழைமேகமென்றேன் - அது
கொண்டோர் இடிமின்னல் விளைவாகக் கண்டேன்
அழகான இதழ் மலருமென்றேன் - சொற்கள்
அதனின்று எழும்போது அம்பாக நொந்தேன்

0 comments:

Post a Comment